Lifestyle

நயன்தாரா குறித்து ‘கீழ்த்தரமான’ பேச்சு.. நடிகர்-நடிகைகள், நெட்டிசன்கள் கடும் விளாசல்!

Manjula Sadaiyan  |  Mar 24, 2019
நயன்தாரா குறித்து ‘கீழ்த்தரமான’ பேச்சு.. நடிகர்-நடிகைகள், நெட்டிசன்கள் கடும் விளாசல்!

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா(Nayanthara), தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக கொலையுதிர் காலம்,தளபதி 63 ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் நயன்தாரா(Nayanthara) வாழ்வில் தனிப்பட்ட முறையில் சர்ச்சைகள் இருந்தாலும், அதனையும் தாண்டி தனது நடிப்பு, குணத்தால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவின் (Nayanthara) மார்க்கெட் இருக்கிறது. ஹீரோவுக்கு இணையாக தனிப்பட்ட முறையில் ஒரு படத்தினையே தோள்களில் தாங்கும் அளவுக்கு தனது நடிப்பால் விஸ்வரூபமெடுத்து இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சைகள் வந்தாலும், தனிவாழ்வில் ஏற்ற-இறக்கங்கள் இருந்தாலும் அவரது நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் பேவரைட் நடிகையாக நயன்தாரா(Nayanthara) திகழ்கிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து மேடையில் பேசியது திரையுலகில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது கீழ்த்தரமான பேச்சுக்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கொலையுதிர் காலம்

நயன்தாராவை மையப்படுத்தி உருவாகி வரும் கொலையுதிர் காலம் படத்தை இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே இசையமைப்பாளர் யுவன் இப்படத்தின் இசை தன்னுடையது அல்ல என தெரிவித்து இருந்தார். மேலும் படத்தின் இயக்குநர் சக்ரி டோலட்டியும் இதில் கலந்து கொள்ளவில்லை. இதற்கெல்லாம் உச்சகட்டமாக நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து கீழ்த்தரமான முறையில் பேசி சமூக வலைதளங்களில் கடும் நெருப்பினைப் பற்ற வைத்துள்ளார்.

ராதாரவி

மேடையில் நடிகர் ராதாரவி பேசுகையில் ”எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்,” இவ்வாறு ராதாரவி பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக விக்னேஷ் சிவன் தொடங்கி பலரும் ராதாரவிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்

இயக்குநரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை,” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராதிகா சரத்குமார்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் கண்டனத்துக்கு ராதாரவியின் சகோதரியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் பதில் அளித்துள்ளார். அதில்,” துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான பெண்களில் நயன்தாராவும் ஒருவர். அவருடன் ஒருசில படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறேன். அந்த வீடியோவை நான் இன்னும் முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் இன்று நான் ராதாரவியை சந்தித்தபோது அவர் பேசியது முற்றிலும் தவறு என்று கூறினேன்,” என எடுத்து சொல்லி இருக்கிறார்.

ராதாரவியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும், தங்களது கடுமையான கண்டனத்தினைப் பதிவுசெய்து நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More From Lifestyle