DIY Life Hacks

நிலையற்ற உறவுகள் விட்டு செல்லும் தனிமை.. எப்படி கையாள்வது..

Deepa Lakshmi  |  Apr 25, 2019
நிலையற்ற உறவுகள் விட்டு செல்லும் தனிமை.. எப்படி கையாள்வது..

தனிமை எனும் வார்த்தையே மிக ஆழமான வலிகள் கொண்டது என்பது எனது கருத்து. இந்த உலகின் யாரும் இல்லாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. பெற்றவர்கள், உறவுகள், நண்பர்கள் என எப்படியும் யாரோ ஒருவருடைய துணை இல்லாமல் ஒருவரால் வளரவே முடியாது.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வித்யாசமான காலம்.முன்பெல்லாம் கடிதங்கள் சென்று சேரும் நேரங்கள் திரும்ப வரும் பதில்கள் என காலம்  நீண்டதாக இருந்தன.இதற்கு முன்பு போல இல்லாமல் ஒரு கிளிக்கில் உங்கள் உறவினரோடு நண்பரோடு நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

ஆனாலும் கூட அப்போது இருந்ததை விடவும் தனிமை இப்போதுதான் அதிகமாக இருப்பது கொஞ்சம் முரணாகத்தான் இருக்கிறது. சரி செய்ய முடியாத தனிமையை கவலையோடு அணுகுவதை விட தெளிவாக இருப்பது நல்லது.

அன்றில் பறவைகள் ஒன்றாகும் போது.. லிவிங் டு கெதர் – தேவைகளும் தீர்வுகளும் !

கொஞ்சம் தனிமை பற்றி (loneliness)

உங்களுக்கு இந்த மாதிரி உணர்வுகள் அடிக்கடி எழுகிறதா? சாய்ந்து கொள்ள தோள் இல்லை, தலை வருட விரல்கள் இல்லை, உங்கள் மனதில் இருப்பதாய் பகிர யாரும் இல்லை, மெல்ல பரவும் தனிமை நேரங்கள் இவற்றையெல்லாம் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா.

நாமும் ஒரு சமூக மிருகம்தான்.மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த படும்போது  நமக்கும் இது போன்ற உணர்வுகள் வர நேரிடலாம். இதனால்தான் இந்த நேரத்தில் சமூகத்தோடு சுலபமாக தொடர்பு கொள்ளும் ஆறுதல் வழிகளை மூளை தேடுகிறது. சமூக வலைத்தளங்களில் இதற்கான வடிகால்கள் கிடைக்கின்றன,

நரம்பியல் விஞ்ஞானிகளின் கூற்று படி பார்த்தால் சமூகத்தில் தொடர்பு கிடைக்காமல் போனவர்களின் வலி என்பது பசி, தாகம் , உடல் ரீதியான வலிகளுக்கு சமமாக மூளையால் உணரப்படுகிறது என்கிறார்கள்.

சுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் – பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி

தனிமைக்கு என்ன காரணம்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாறி வரும் நவீன யுகம் தனிமையை மனிதனுக்கு பக்கவிளைவாக்கி இருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி தனி தீவுகளில் ஒன்றாக வாழ்கின்றனர்.

உங்கள் ப்ரியத்துக்குரியவர்கள் உங்கள் கையெட்டும் தூரத்தில் இருந்தாலும் மாறி வரும் தொழில்நுட்பங்களால் உங்களிடம் இருந்து மனதளவில் தூரமாக விலகி இருக்கலாம். பேசி பகிர நேரமில்லாமல் இருக்கலாம். ரகசிய துரோகங்களால் நீங்கள் துண்டாடப்பட்டிருக்கலாம்.

குற்றங்கள் செய்து சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்து கொண்டவர்கள் நம்மிடம் யாரும் பேச மாட்டார்கள் என்கிற பயத்தில் இருக்கலாம். நிராகரிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாமல் யாருடனும் பழகாமல் இருக்க முடிவு செய்திருக்கலாம்.

சரிசமமாக நடத்தப்படாத குழந்தைகள், ஒப்பிட்டே வளர்க்கப்படும் குழந்தைகள், தாழ்வு மனப்பான்மை யோடு இருப்பதால் அடுத்தவர்களிடம் பழக பயப்படுவார்கள்.

உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? செய்ய வேண்டியது என்ன

தனிமை மோசமான எதிரியா

நிச்சயமாக இல்லை. நமது தேவைகள் மற்றும் ஆசைகள் இதற்கு நடுவே நாம் சமநிலையில் இருக்க வேண்டியது நமது பொறுப்புதான். தனியாக இருந்தாலும் சந்தோஷமாக வாழக்கூடிய ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதே சமயத்தில் உறவுகளோடு இருப்பவர்களை ஆராய்ந்ததில் அவர்களில் 64 சதவிகிதத்தினர் இன்னமும் தான் தனியாக உணர்வதாகவே கூறியிருக்கின்றனர். ஆகவே இது ஒரு மனநிலை தான். நம்மால் மாற்றி கொள்ள முடிகிற மனநிலை.

நீங்கள் பழகிக் கொண்டிருப்பவர் நல்லவரா கெட்டவரா! அறிந்து கொள்ள சில வழிகள்

தனிமையை எப்படி கையாளலாம்

என்னை பொறுத்தவரை தனிமை என்பது நம்மோடு நாம் இருக்க கூடிய அற்புதமான காலம் என்பேன். மற்றவர்களின் எமோஷனல் ப்ளேக்மெயில்கள் போன்றவற்றின் அச்சுறுத்தல் இல்லாமல் நம்மை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள இந்த தனிமை உதவுகிறது.

உங்களை நீங்களே சுய ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம். நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணமாக உங்களுக்கு மஞ்சள் நிறம் பிடித்திருக்கலாம். அதற்கான காரணத்தை நீங்கள் கண்டறியலாம். ஒரு யோசனையின் பின் அடுத்த யோசனை என நூல் பிடித்து கொண்டே போனால் உங்களுக்கு மஞ்சள் ஏன் பிடித்த நிறமாயிற்று என்பது உங்களுக்கு தெரிய வரும்.

இதை போலவே உங்கள் எல்லா உணர்வுகளின் வேரையும் நீங்கள் கண்டடைய முடியும். அடுத்தவரோடு பேசுவதுதான் அற்புதமான வாழ்க்கை என்று எல்லோரும் தவறாக யோசிக்கிறோம். உண்மையில் நம்மோடு நாம் பேசுவதுதான் அற்புதமான வாழ்க்கை. தன்னை பற்றி முழுமையாக தெரிந்தவருக்கு மற்றவர்கள் பற்றி எல்லாமே தெரிய வரும்.

அதற்கேற்ப வலிகள் இல்லாமல் வாழ பழகலாம். நம்மை பற்றி நமக்கே முழுதாக தெரியாத போது மற்றவர்களை பற்றி நாம் தீர்ப்பெழுதுவது சரியாக இருக்குமா என்பது பற்றி யோசியுங்கள்.

பிரேக்கப்பிற்குப் பின் பெண்கள் பார்க்க வேண்டிய படங்கள் !

தனிமை என்பது ஒரு உணர்வல்ல ஒரு வாய்ப்பு.

மனம் எப்போதும் இல்லாத விஷயங்களை கற்பனை செய்வதில் அபாரமானது! அடுத்தவர்களுடன் உங்களை தொடர்பு கொள்ள விடாமல் செய்யும் அந்த எண்ணங்களை கவனியுங்கள். தனிமை என்பது ஒரு உணர்வல்ல ஒரு வாய்ப்பு. உங்கள் மூளை என்பது வலிகளை கவனிக்கும் வேலையை செய்கிறது. உங்கள் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் பயங்களை அது கண்காணிக்கிறது.

நீங்கள் தனிமையாக உணர்கிறீர்கள் என்றால் அது இதனால்தான். மேலும் ஏற்கனவே ஏற்பட்ட காயங்களால் அடிபட்ட உங்கள் மனது மீண்டும் ஒருவரோடு பழக பயப்படுகிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

தனிமை உங்களுக்கு பயத்தை கொடுக்கிறது குழப்பத்தை தருகிறது என்றால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரோடு மனம் விட்டு பேசுங்கள். உங்கள் பெஸ்டியை அழையுங்கள்.

அல்லது வெளியே செல்லுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். கடற்கரையில் இயற்கையோடு இருங்கள். மொட்டை மாடியில் நட்சத்திரங்களை கவனியுங்கள். இங்கே தனியானவர் என்று யாருமே இல்லை. எங்கு சென்றாலும் வானம் நம் உடன் வருகிறது. பூமி நம்மை தாங்குகிறது. காற்று நம்மை உயிர்ப்பிக்கிறது. நீர் நம்மை பரிசுத்தமாக்குகிறது. வெப்பம் நம் இருத்தலை உறுதியாக்குகிறது.

சில சமயங்களில் மிகவும் தனிமையாக இருந்தால் நிறைய வேலைகளை திட்டமிடுங்கள். ஒவ்வொன்றாக முடியுங்கள். அதிக வேலைகள் உங்களை ஆக்ரமித்தால் தேவையற்ற எண்ணங்களில் உங்கள் மனம் சிக்காது. உங்களுக்கு பிடித்த வேளைகளில் இறங்குங்கள். அழுத்தங்கள் இருக்காது.

உடற்பயிற்சி தனிமையினால் ஏற்படும் உங்கள் மன அழுத்தங்களை நீக்கும். ஜிம், நீச்சல், ஏரோபிக்ஸ், ஸும்பா என உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள். என்டார்பின்களை அதிகரியுங்கள்.

யோசியுங்கள். உங்கள் தனிமையை அற்புதமான கருவி ஆக்கி அதனையே உங்கள் ஆயுதமாக்கி உங்கள் வாழ்வை பாதுகாப்பாக வாழ முடியும்.

கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் எழுதிய நதி போகும் கூழாங்கல் பாடலில் வரும் வரிகள் உங்கள் தனிமைக்காக என் சமர்ப்பணம்

ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு

நம் கண்ணீர் இனிக்கட்டுமே !

 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

 

 

Read More From DIY Life Hacks