Lifestyle

மகத்துவம் நிறைந்த கரிசலாங்கண்ணி மூலிகையின் ஆரோக்கிய மற்றும் கூந்தல் வளர்ச்சி நன்மைகள்!

Swathi Subramanian  |  Nov 13, 2019
மகத்துவம் நிறைந்த கரிசலாங்கண்ணி மூலிகையின் ஆரோக்கிய மற்றும் கூந்தல் வளர்ச்சி நன்மைகள்!

கரிசலாங்கண்ணி பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகை செடியாகும். கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. 

இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகை உள்ளது. வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். 

முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது. கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை எனும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணியின் ஊட்டச்சத்து மதிப்பு (Nutritional Value of karisalankanni )

கரிசலாங்கண்ணிக் கீரையில் (karisalankanni) இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன. 

மேலும் மணிச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ, வைட்டமின்  சி, முதலிய சத்துக்களும், தாது உப்புக்களும், மாவுச்சத்தும், புரதம் போன்றவைகளும் இருக்கின்றன. கரிசலாங்கண்ணி மூலிகையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் குறித்து இங்கு காண்போம்.

twitter

100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

நீர் – 85%,
மாவுப்பொருள் – 9.2%,
புரதம் – 4.4%,
கொழுப்பு – 0.8%,
கால்சியம் – 62 யூனிட்,
இரும்புத் தாது – 8.9 யூனிட்,
பாஸ்பரஸ் – 4.62%.

கரிசலாங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits of karisalankanni )

கரிசலாங்கண்ணி (karisalankanni) மூலிகையில் ஏராளமான சதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் கரிசலாங்கண்ணியை தினமும்  உபயோகித்து வருபவர்களுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கை கிடைக்கும். கரிசலாங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக பாப்போம். 

மேலும் படிக்க – பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த யோகார்டின் ஆரோக்கிய மற்றும் சரும பாதுகாப்பு நன்மைகள்!

மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிக்கிறது (Treats jaundice )

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது  கரிசலாங்கண்ணிக் கீரையாகும். மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை காலை, மாலை என இருவேளை 10 இலைகளைப் பறித்து வெந்நீரில் அலசி அப்படியே மென்று சாப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களும் விரைவில் குணமாகும்.

அல்சரை குணப்படுத்த (Get rid of ulcers )

கரிசலாங்கண்ணி மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை வைத்தே அல்சரை எளிதில் குணப்படுத்தலாம். கரிசலாங்கண்ணி இலைகளை காயவைத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட அல்சராக இருந்தாலும் 4 மாதங்களில் சரி ஆகிவிடும். மேலும் அஜீரணம், குடல்புண் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கரிசலாங்கண்ணிக்கு உள்ளது.

pixabay

நீரிழிவு நோயை சரிசெய்ய (Cure diabetes )

நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை கரிசலாங்கண்ணி தான். இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க கரிசலாங்கண்ணி (karisalankanni) கீரை சிறந்த மருந்தாகும். கரிசலாங்கண்ணி கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது (reduce the risk of cancer )

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், உடலில் உள்ள தாதுக்கள் பலப்படுத்துவதற்கும் கரிசாலங்கண்ணி உதவுகிறது. கரிசலாங்கண்ணிக்கு புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும் தன்மை உள்ளது. கரிசலாங்கண்ணியை தினசரி குறிப்பிட்ட அளவு எடுத்து மாத்திரை அளவு உருட்டி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களை வேருடன் அழித்து மீண்டும் வளராமல் தடுக்க உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த (Improves eye health )

கரிசலாங்கண்ணி மூலிகை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பார்வையை தெளிவுபெற செய்யும் திறன் பெற்றது. கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண் வறட்சியைப் போக்கும். கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.  கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவயும் குணமாக்கும். 

pixabay

குடல் அழற்சியை நீக்குகிறது (relieves bowel inflammation )

கரிசலாங்கண்ணி கீரை குடல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. கரிசலாங்கண்ணி கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் குடல் அழற்சி குணமாகும். மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும், எரிச்சலையும் கரிசலாங்கண்ணி கீரை குணப்படுத்துகின்றது. மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. மேலும் அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றையும் சரிசெய்கிறது.  

மேலும் படிக்க – பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !

சுவாச சிக்கல்களுக்கு (respiratory Issues)

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீர கரிசலாங்கண்ணி உதவுகிறது. ஆஸ்துமா, இருமல் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் தீருவதுடன்  இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் உள்ள நீர்த்தன்னையை சரி செய்கிறது. கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தாலும் சுவாச சிக்கல்கள் குணமாகும். 

தேள் கடித்தலுக்கு (Aids for scorpion bites)

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் சாற்றை மோரில் கலந்து குடித்தால் தேள் கடி விஷம் இறங்கிவிடும். தேனி கடித்தால் கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. கரிசலாங்கண்ணி இலை, 20 மிளகு மற்றும் சிறிதளவு தேங்காய் இரண்டையும் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இதனால் தேள்கடி விஷம் குறையும். ஆட்டுப்பாலுடன், கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து அரைத்து கொடுத்தால் விஷக் கடியால் ஏற்படும் வலி குறையும்.

pixabay

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Improves Immunity)

இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கரிசலாங்கண்ணி உதவுகிறது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதன் மூலம் எளிதில் பரவக்கூடிய காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். கரிசலாங்கண்ணி சாறை, எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்தும் குடித்து வரலாம். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டிற்குமே நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

தோல் நோய்களை சரிசெய்ய (Tackles Skin Diseases)

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். வாரத்துக்கு இரண்டு நாள் கரிசலாங்கண்ணி கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். மேலும் இந்த சாறை உடலில் தேய்த்தும் குளிக்கலாம்.

 

கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணியின் நன்மைகள் (benefits of karisalankanni for hair )

கரிசலாங்கண்ணி கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க கரிசலாங்கண்ணி முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து காண்போம். 

முடி உதிர்தலைத் தடுக்கிறது (Prevents hair loss )

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக்கி காய வைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை கொதிக்க வைத்த தேங்காய் எண்ணெயில் போட்டு சிடு  சிடுப்பு அடக்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும். மேலும் இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரையும் மறைந்துவிடும். 

pixabay

முடிக்கு பிரகாசம் அளிக்க (Adds shine )

உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் கரிசலாங்கண்ணி தான். முடியை இயற்கையாக வளர வைக்கும் தன்மை இதற்கு உண்டு. கரிசலாங்கண்ணி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் இயற்க்கை பிரகாசத்தை கூந்தலுக்கு தருகிறது. கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தலையில் முடியின் வேர்களில்  படும்படி தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வர தலைமுடி பிரகாசகத்துடன் நன்றாக வளரும்.

  மேலும் படிக்க – இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

முடி நரைப்பதைத் தடுக்கிறது (Prevents graying of hair )

இன்றைய தலைமுறையினர் நரை முடியினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்ய கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு இந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

pixabay

பொடுகை நீக்குகிறது (Fights with dandruff )

முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பொடுகை நீக்கி தோல் எரிச்சலை குணமாக்கும் தன்மை கரிசலாங்கண்ணிக்கு உள்ளது. 50 மில்லி தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை மறையும். முடி கருமையாக வளரும். கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும்.

வீட்டில் கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி (How to make karisalankanni oil at home)

கரிசலாங்கண்ணி எண்ணெய்யை வீட்டிலேயே நாம் எளிமையாக தயாரிக்க முடியும். வயல் வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்து கிடைக்கும்  கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு எப்படி எண்ணெய் தயாரிப்பது என விளக்கமாக இங்கு பாப்போம். 

எண்ணெய் தயாரிக்கும் முறை – 1 (karisalankanni hair oil preparation method -1)

தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்,
நெல்லிக்காய் – 100 கிராம்,
கீழாநெல்லி இலை – 100 கிராம்,
கறிவேப்பிலை – 100 கிராம்,
செம்பருத்தி பூ – 100 கிராம்,
வெந்தயம் – 25 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்.

youtube

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட மூலிகைகளை எல்லாம் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்க விடவும். 

மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத் தொடங்கிய உடன் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

எண்ணெய் தயாரிக்கும் முறை – 2 (karisalankanni hair oil preparation method – 2)

தேவையான பொருட்கள் 

கரிசலாங்கண்ணி  – 1 கப்,
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப்,
செம்பருத்தி இலை – 1/2 கப்,
செம்பருத்தி பூ – 1/2 கப்,
கறிவேப்பிலை – 1 கப்,
கீழாநெல்லி இலை – ½ கப். 

youtube

செய்முறை:

எண்ணெய்யை தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கழுவி வீட்டிற்குள் ஒரு துணியை விரித்து காய வைக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பேஸ்ட் போல் ஆகும் வரை அரைக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெயை ஊற்றி அரைத்த விழுதை போடவும். பின்னர் அடுப்பை மெதுவான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். 

சிறிது நேரத்தில் கொதி அடங்கியவுடன் நன்றாக ஆற வைக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்து 5-6 மணிநேரம் அப்படியே விட்டு விடவும். 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த எண்ணெயை வடிகட்டி தினமும் பயன்படுத்தவும்.

கரிசலாங்கண்ணி சீயக்காய் ஷாம்பூ (how to make karisalankanni shampoo)

தேவையான  பொருட்கள் : 

கரிசலாங்கண்ணி இலை – 3 கப்,
சீயக்காய்- 1 கிலோ,
செம்பருத்திப்பூ- 50,
பூலாங்கிழங்கு – 100 கிராம்,
எலுமிச்சை தோல் – 25,
பாசிப்பருப்பு – கால் கிலோ,
மரிக்கொழுந்து – 20 குச்சிகள்,
மல்லிகை பூ  – 200 கிராம்.

youtube

செய்முறை : 

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து  அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவுக்குப் பதிலாகப் இதனை பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ  நன்றாக நுரை வரும். பொடுகை நீக்கி முடி கருமையாகும் தன்மை இந்த ஷாம்பூவிற்கு உள்ளது. 

கரிசலாங்கண்ணியின் பக்க விளைவுகள் (Side effects )

கரிசலாங்கண்ணி எண்ணற்ற நன்மைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அதனை அதிகமாக பயன்படுத்தும் போது ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

குளிர்ச்சி (Cold )

கரிசலாங்கண்ணி குளிர்ச்சியான மூலிகையாகும். இதனை குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேலே கொடுக்கும் போது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். உதாரணமாக சளி, காய்ச்சல், ஜலதோஷம் பிரச்சனைகள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

pixabay

எரிச்சல் உணர்வு (Burning sensation )

கரிசலாங்கண்ணி சிலருக்கு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஏதேனும் ஆரோக்கிய காரணத்திற்காக கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி வருபவர்கள் எரிச்சல் உணர்வு தொற்றினால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். தோல் நோய்களுக்கு கரிசலாங்கண்ணியை பயன்படுத்தும் சமயத்தில் எரிச்சல் உண்டானால், அவற்றை உடனடியாக கழுவி விட்டு அங்கு ஐஸ் கட்டி கொண்டு தேய்க்கலாம். 

கேள்வி பதில்கள் (FAQ’s)

கரிசலாங்கண்ணி எண்ணெய் உண்மையில் வேலை செய்யுமா? (Does karisalankanni oil really work?)

ஆம். கரிசலாங்கண்ணி  எண்ணெய் கூந்தலின் வேர்களில் செயல்படுத்துகிறது, இதன் விளைவாக முடி வளர்ச்சி அதிகரிக்கும். 10 நிமிடங்களுக்கு இந்த எண்ணெயை மசாஜ் செய்து, குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் விடவும். பின்னர் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.  

கரிசலாங்கண்ணி தூளை சாப்பிடலாமா? (Can we eat karisalankanni powder?)

கரிசலாங்கண்ணி தூள் ஒரு சக்திவாய்ந்த ஆயுர்வேத மருந்து, இது பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளலாம். நீர், பசுவின் நெய், தேன் ஆகியவற்றுடன் கலந்து சாப்பாட்டுக்கு முன் இதை உட்கொள்ளுங்கள். நாள்பட்ட காய்ச்சலுக்கு பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

pixabay

கரிசலாங்கண்ணி சருமத்திற்கு நல்லதா? (Is karisalankanni good for skin?)

ஆயுர்வேதத்தின்படி கரிசலங்கண்ணி இலை ஒரு சக்திவாய்ந்த சுத்தப்படுத்தியாக கருதப்படுகிறது. மேலும் இது சருமதிற்கு மிகவும் நல்லது. பல்வேறு முடி மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க கரிசலாங்கண்ணி எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle