Family

அவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுக்கொடுக்க கஷ்டமாக இருந்தது – திருமதி. சூர்யா சரவணன்!

Deepa Lakshmi  |  Aug 1, 2019
அவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுக்கொடுக்க கஷ்டமாக இருந்தது –  திருமதி. சூர்யா சரவணன்!

பிக் பாஸ் போட்டியாளர்களில் சரவணன் மிகுந்த வித்தியாசமானவர். மிகவும் அமைதியாக இருக்கும் அதே நேரம் நடப்பதை எல்லாம் கவனித்தபடியும் இருக்கிறார். தேவைப்பட்ட நேரங்களில் குரல் உயர்த்தவோ கருத்தை சொல்லவோ அவர் தயங்குவதில்லை.

அவர் பிக் பாஸ் ஜெயிலுக்குள் போக வேண்டிய சூழல் வந்த போது அது வரை அமைதியாக இருந்த சரவணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பேச ஆரம்பித்தார். அவரின் தீர்க்கமான பேச்சு அனைவரையும் வாயடைக்க செய்தது.

அதன் பின்தான் சரவணன் (saravanan) என்பவரை அனைவருமே கவனிக்க ஆரம்பித்தனர். சரவணன் தன்னுடைய துயரங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது அவர் மிகவும் விரும்பி நேசித்த முதல் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.

அப்படிக் கூறும்போதே தன்னுடைய இரண்டாவது திருமணத்தையும் முதல் மனைவிதான் நடத்தி வைத்தார் என்றும் கூறினார். அந்தக் கதையைக் கேட்ட கமல்ஹாசன் கூட உங்கள் முதல் மனைவி என்பவர் உங்கள் தாய் என்று கூறி நெகிழ்ந்தார், அப்படிப்பட்ட அவரது முதல் மனைவி பற்றிய விபரங்கள் தேடியபோது அவரே ஒரு தனியார் இணையதளத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியின் சாராம்சத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சரவணன் தன் வாழ்வின் மிகப்பெருமையாக கருதும் ஒரு பெண்மணியான முதல் மனைவியின் பெயர் சூர்யா. இவர்கள் இருவரும் அடையார் பிலிம் இன்ஸ்டிடியுட்டில் படிக்கும்போதே காதல்வயப்பட்டுள்ளனர். அதனைப் பற்றி திருமதி சூர்யா சரவணன் குறிப்பிடுகையில் என்னை பல நாட்களாக சரவணன் பின் தொடர்ந்தாலும் நான் முறைத்து கொண்டே இருப்பேன். ஆனால் ஒரு நாள் அந்தக் காதல் நிகழ்ந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

சூர்யாவை நேரில் பார்க்கும் முன்னர் புகைப்படத்தில் பார்த்த உடனேயே சரவணன் உடன் படிக்கும் மாணவர்களிடம் இந்தப் பொண்ண நான் லவ் பண்ணப் போறேன் வேற யாரும் வந்தராதிங்க என்று கூறியிருக்கிறார்! சரவணன் கூறியதை போலவே சூர்யா அவ்வளவு அழகாகத்தான் இருக்கிறார்.

பேட்டியின் நடுநடுவே பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய கேள்வியும் வந்து போனாலும் அவரிடம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அதுவல்லவே. சரவணன் மனைவி சூர்யா மிகுந்த கனிவோடும் கருணையோடும் தோற்றமளிக்கிறார். பக்குவப்பட்ட பெண்மணியின் முகமும் பேச்சும் ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது.

குடும்ப சிரமங்களை சரி செய்வதற்காக பிக் பாஸ் வந்த போட்டியாளர்கள் ! சிறப்பு பார்வை

ஒவ்வொரு கேள்விக்கும் கூர்மையாக அதே நேரம் நேர்மையாக பதில் அளிக்கிறார். இரு வீட்டாரும் இவர்கள் காதலுக்கு சம்மதிக்காத சமயம் இவர்களே வீடெடுத்து தங்கியது பற்றி சரவணன் பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்திருக்கிறார். வீட்டை எதிர்த்துக் கொண்டு திருமணமும் செய்திருக்கின்றனர். குழந்தைக்காக நிறைய மருத்துவமனைகளையும் சூர்யாவும் சரவணனும் நாடி இருக்கின்றனர்.

எல்லா மருத்துவமனைகளும் சூர்யாவைக் கைவிடவே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவே விரும்பியிருக்கிறார் சூர்யா. ஆனால் அவரின் மாமியார் சரவணனின் அம்மாவின் நிர்ப்பந்தத்தால் இரண்டாவது திருமணம் நடந்தது என்கிறார் சூர்யா.

குழந்தைக்காக கணவரை விட்டுக் கொடுக்க நேர்ந்த போது என்ன மனநிலை இருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் வேற வழி? என்று அவர் மென்மையாக கேட்கும்போது இதயத்தின் உள்ளே ஊசி ஒன்று பாய்வதை தவிர்க்க முடியவில்லை. தனக்கு விருப்பமில்லை என்றாலும் நடக்கப் போகிற எதையும் தடுக்க முடியாது என்கிற போது தானே இறங்கி செலவு செய்து அந்த திருமணத்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.

 

எதற்காக இரண்டாவது திருமணம் செய்யப்பட்டதோ அது நடந்த போது , குழந்தை பிறந்த உடன் அது பார்க்க சரவணன் போலவே இருப்பதை பார்த்து இவருக்கும் சந்தோஷம் வந்திருக்கிறது. சூர்யாவின் பேட்டியை பார்க்கும்போதும் சரி பிக் பாஸ் வீட்டின் உள்ளே சரவணன் தனது குடும்பத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் நெகிழும்போதும் சரி இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜோடிகள் என்றுதான் தோன்றுகிறது.

சரவணன் – சூர்யா ஆகிய இருவருக்குமே பல அனுபவங்களில் பழுத்த ஞானமும் பக்குவமும் நிறையவே இருக்கிறது. அதனால்தான் எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பெண்ணும் விட்டுக் கொடுக்க விரும்பாத ஒரு விஷயத்தை சூர்யா செய்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

அந்த பேட்டி இப்படி முடிகிறது.. சரவணன் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணினால் என்ன உணர்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது நான் பெருமையாக உணர்வேன் என்று சூர்யாவிடம் இருந்து பதில் வருகிறது. பேட்டி எடுத்தவர் உண்மையிலேயே உங்களை நினைத்தால் எனக்கும் பெருமையாக இருக்கிறது என்று கூறித் தனது பேட்டியை முடிக்கிறார். நிஜம்தான் இல்லையா. கணவரின் நிம்மதிக்காக கணவரையே இன்னொரு பெண்ணிடம் விட்டுக் கொடுக்க யார் முன் வருவார்கள்?

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Family