Lifestyle

சைக்கோத்தனத்தின் குணங்கள் என்ன? உடன் பழகுபவரின் நடவடிக்கைகள் உங்களை பாதிக்கிறதா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள் !

Deepa Lakshmi  |  Feb 26, 2019
சைக்கோத்தனத்தின் குணங்கள் என்ன? உடன் பழகுபவரின் நடவடிக்கைகள் உங்களை பாதிக்கிறதா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள் !

பல்வேறு தரப்பட்ட மனிதர்களோடு பழக வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். முகம் பார்க்க முடியாத முகநூல் நட்பில் இருந்து அருகே இருந்தபடியே அலைக்கழிக்கும் உறவுகள் வரை நாம் பல மனிதர்களோடு பழ வேண்டி உள்ளது. எல்லாவற்றும் அனுபவமே மிக சிறந்த ஆசான் என்பார்கள். எல்லா அனுபவங்களையும் நாம் ஒவ்வொன்றாக அனுபவித்துக் கற்றுக் கொண்டிருக்க முடியாது. நமக்கு அதற்கான நேரம் இந்த பூமியில் கொடுக்கப்படவில்லை.

ஆகவே மற்றவர்களின் அனுபவங்களின் மூலமும் நமக்கான பாடங்களை நாம் கற்றுக் கொண்டோமானால் மிச்சம் இருக்கும் வாழ்வை நிம்மதியாக வாழ முடியும்.

அழுத்தங்கள் நிறைந்த இந்த பூமியில் பெரும்பாலும் ஒவ்வொருவரும் உளவியல் ரீதியில் ஏதாவது பாதிப்புடன்தான் இருப்பார்கள். இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் இதனை சுலபமாக கையாள்கின்றனர். தெரியாதவர்கள் தெரியாமலே இறந்தும் விடுகின்றனர். ஒரு சிலரோ தெரிந்தாலும் அதனை குரூரமாக ரசிக்கும் மனப்பான்மை பெறுகின்றனர். (psycho persons)

அந்த ஒரு சிலரை பற்றிய பதிவுதான் இது.

எவ்வளவுதான் நாம் பொறுமையாக இருந்தாலும் ஒரு சில மனிதர்களுக்கு நம்மை சீண்டிப் பார்ப்பது தான் பிடித்த பொழுதுபோக்காக இருக்கும்.

ஒரு புழுவாகவே இருந்தாலும் சதா விடாமல் அதனைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால் தனது இயல்பில் இருந்து மாறி கொஞ்சம் எதிர்ப்பு காட்டும். கோபப்படும். இதுதான் அந்த மாதிரி சமயங்களில் நமக்கும் நிகழ்கிறது.

இப்படி நமது இயல்பை மாற்றக் கூடிய அளவிற்கு தீவிரமாக ஒரு நபரின் செயல்கள் இருக்கிறதென்றால் நிச்சயம் இதனை நாம் யோசிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் குண நலன்களை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

ஸ்மார்ட் சைக்கோ

இவர்களை உடனடியாக நம்மால் கண்டறியவே முடியாது. ஐக்யூ லெவல் அதிகமாக இருப்பவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் தாமதமாகக் கண்டுபிடிக்கலாம். பெரும்பாலும் உயர் பதவியில் இருப்பார்கள் அல்லது பொதுவெளியில் நன்மதிப்புடன் திகழ்வார்கள். இவர் இப்படி என்று கூறினால் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அந்த அளவிற்கு இவர்கள் ஆர்கனைஸ்டாக தங்கள் குற்றங்களை நிகழ்த்தி குரூரப்பட்டுக் கொள்வார்கள்.

இவர்கள் எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். இதற்கெனத் தனது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். பலவீனர்களிடம் வீரம் காட்டும் கோழைகளான இவர்கள் பலவீனமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் குரூரங்களை பாய்ச்சுவார்கள். உதாரணமாக யாரிடமும் கோபத்தை காட்டமுடியாத போது வீட்டில் உள்ள குழந்தைகளிடம் அல்லது பெண்களிடம் ஆத்திரத்தை பலமாக காட்டுவதை சொல்லலாம். இது இயலாமை என்றாலும் இதே விஷயம் தொடர்கையில் ஒரு நாளில் அவர்கள் அறியாமலே உளவியல் பாதிப்பினை அடைந்திருப்பார்கள்.

அப்பாவி சைக்கோ

இருப்பதிலேயே இவர்கள்தான் ஆபத்தானவர்கள். எத்தனையோ நிஜ சம்பவங்கள் எத்தனையோ சினிமாக்கள் இதுபற்றி நிறைய எடுக்கப்பட்டு விட்டது. தலையில் எண்ணெய் வழிய சோடா புட்டி கண்ணாடி மாட்டிய ஒருவனோ அல்லது பள்ளியில் முதல் வகுப்பில் பாஸ் செய்யும் அறிவு ஜீவி பெண்ணோ இப்படி எளிதில் சந்தேகப்படமுடியாத ஒருவரே பெரும்பாலும் இந்த அப்பாவி சைக்கோ வகையை சேர்ந்தவராக இருப்பார்கள்.

இவர்கள் வேலை என்னவென்றால் அருகே இருப்பவரை வேண்டும் என்றே சீண்டி பார்ப்பது. அருகில் இருப்பவர், உடன் பழகுபவர், உடன் வேலை செய்பவர் , நேசிப்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் அவர்கள் இருக்கலாம். பேசிக்கொண்டே இருக்கும்போதே நம்மை பற்றிய தவறான ஒரு விஷயத்தை இவர்கள் கூறுவார்கள்.

இவர்களை யாரும் ஜட்ஜ் செய்யக் கூடாது என்று விரும்பும் இவர்கள்தான் மற்றவர்களை பற்றி தவறான கருத்துக்களை பொதுவெளியில் கூறுவார்கள். தனக்கொரு நீதி மற்றெல்லோரும் தனது அடிமைகள் என்கிற அரச நினைப்பு தான் உளவியல் ரீதியாக இவர்களை பாதிக்கிறது. இதை உலகில் சரியான செயல்களை விடவும் முறையற்ற தகவல்தான் உடனடியாக எல்லாரையும் சென்று சேர்கிறது என்கிற அறிவை இவர்கள் அறிந்திருப்பதால் இந்த முறையைக் கையாள்வார்கள். எல்லாம் முடிந்த பின்பு ரகசியமாக நம்மிடம் தெரியாமல் சொல்லிட்டேன் சாரி என்கிற மன்னிப்பையும் நமட்டு சிரிப்புடன் கூறுவார்கள். அப்பாவி நாமா அவர்களா ?

செலெக்ட்டிவ் அம்னீஷியா

நமது ரத்த அழுத்தத்தை உயர்த்துவதில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் சாதாரண நண்பனாகவோ சக பணியாளராகவோ காதலனாகவோ சக பயணியாகவோ யாராக வேண்டுமானாலும் இந்த பட்டியலில் வரலாம். புதியவர்களாக நம் வாழ்வில் நுழைய விரும்பும் இவர்களுக்கு முக்கிய நோக்கமே பெரும்பாலும் மற்றவரைக் காயப்படுத்தி அதில் சுகம் காண்பதுதான்.

அதிலும் நம்மால் நிரூபிக்க முடியாவண்ணம் ஏதாவது செய்ய விரும்புவார்கள். வெளியில் சொல்ல முடியாமலும் உள்ளே வைத்துக் கொள்ள முடியாமலும் நாம் தவிப்பதை இவர்கள் ரசிப்பார்கள். எல்லா இடங்களிலும் சிசிடிவி வைக்க முடியாது. எல்லா பேச்சுக்களையும் நாம் பதிவு செய்ய முடியாது என்பதை அறிந்த இவர்கள் சர்வ சாதாரணமாக நம்மேல் அவர்கள் வன்முறையை அவிழ்த்து விடுவார்கள்.

இவர்கள் நம்மிடம் தவறாக பேசியதை அவதூறு கூறியதை பற்றி நாம் இவர்களிடம் திரும்ப கேட்டோம் என்றால் நமக்கு தலைவலிக்கும் வரைக்கும் தான் பேசியதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அப்படியா நான் எப்போ அப்படி கூறினேன் என்பார்கள். பேசி முடித்த சில நொடிகளில் இதைப்பற்றி கேட்டாலும் கூட நான் எப்போது உன்னிடம் பேசினேன் என்று கேட்பார்கள். பொதுவெளியில் பேசி இருந்தாலும் மற்றவர்களிடம் தான் அப்படி கூறவே இல்லை என்பார்கள். நாகரிகம் தெரிந்த மற்றவர்கள் ஒரு பரிதாபமான பார்வையை இவர்கள் மீது வீசியபடியே நகர்ந்து போவார்கள். நமக்குத் தெரிகிறது இவர்கள் சைக்கோத்தனத்தின் உச்சத்தில் இருப்பது. ஆனால் அவர்களால் உணரமுடியாது.

இப்படிப்பட்ட நபர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிக சாதாரணமாகத்தான் தெரியும். பாதிக்கப்படும் (victim ) நபர்களுக்குத்தான் அதன் பின் இருக்கும் குரூரம் தெரியும்.

எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

துல்லிய நீர்ப்பரப்பில்
தூய வெள்ளை நிறத்தில்
துறவி போல வந்து
ஒற்றைக் காலில் நின்றபடி
தவம் புரிகிறது

என்றாலும் கூட
மீனுக்குத்தானே தெரியும்

கொக்கின் குரூரம் !

— எவ்வளவு அற்புதமான அர்த்தம் சொல்லும் கவிதை!

மேற்கண்ட குணநலன்கள் நீங்கள் பழகுபவரிடம் தொடர்ந்து காணப்பட்டால் உங்களுக்கு உங்கள் ஆராவிற்கு உங்கள் ஆன்மாவிற்கு அவர் ஏற்றவர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். விலகி விடுங்கள்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

 

 

Read More From Lifestyle