Lifestyle

தாயாக போகிறீர்களா.. உங்களுக்கான உதவிக் குறிப்புகள்..

Deepa Lakshmi  |  Jun 15, 2019
தாயாக போகிறீர்களா.. உங்களுக்கான உதவிக் குறிப்புகள்..

தாய்மை என்பது பெண்மையின் முழுமை. தாய்மை என்பது தவம் செய்யாமலே இறைவன் நமக்கு அருளிய வரம். தாய்மை என்பது பெண் இனத்திற்கான பெருமை. இப்படி தாய்மை என்கிற ஒற்றை சொல்லில் ஓராயிரம் வாக்கியங்களை உருவாக்கி கொண்டே போகும் அளவிற்கு அற்புதமான இயற்கையின் வரம் தாய்மை.     

தாய்மை அடைதல் பற்றிய சரியான புரிதல்கள் இன்றைய இன்டர்நெட் காலங்களில் நமக்கு இருப்பதில்லை. கர்ப்பமான காலங்களில் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ள அப்பத்தாவும் அம்மச்சியும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. அதுதான் இன்றைய தலைமுறையின் பெரும் சாபம்.     

ஆனாலும் இயற்கை எதற்காகவும் காத்திருப்பதில்லை. தனக்கான பயணத்தை நிறுத்துவதும் இல்லை. அப்படியான ஒரு காலத்தில் தாய்மை பற்றி முற்றிலும் அறிந்து கொண்டு அதனை சிறப்பாக கொண்டாடி ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை பெற்றெடுங்கள். அதற்கான சில குறிப்புகள் உங்களுக்காக.      

பேறுகாலத்திற்கு முந்தைய பராமரிப்பு

ஒரு பெண் தாய்மை அடைந்து விட்டபின்னர் பிரசவம் நல்லபடியாக முடிகிற வரைக்கும் பல விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டி வரும். மருத்துவ பரிசோதனை மருந்து மாத்திரைகள் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கான உணவுகள் என பல விஷயங்களில் தாய்மை அடைந்த பெண்ணுக்கு பராமரிப்பு தேவைப்படுகிறது (prenatal care) 

உங்களை கவனிக்க ஒருவர் வேண்டும்

என்னதான் நீங்கள் தனியாக இருந்தாலும் உங்களை நீங்களே சரியாக பார்த்துக் கொண்டாலும் கணவரின் அக்கறை சூழ இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றினாலும் 10 மாதங்கள் தொடர்ந்து உங்களை நீங்களே கவனித்து கொண்டிருக்க சாத்தியம் இல்லை. நிச்சயம் இதற்கு இன்னொருவர் உதவி வேண்டும். அது உங்கள் கணவராக கூட இருக்கலாம். உங்கள் பராமரிப்பு விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தீர்களா அல்லது மறந்து விட்டீர்களா என்பதை அவர்கள் கவனித்து உங்களிடம் சொல்ல வேண்டி இருக்கும்.                                                               

pixabay, youtube, shutterstock

உடற்பயிற்சியும் உற்சாகமும்

உடல் உழைப்புகள் குறைந்து போன இந்தக் காலத்தில் மருத்துவர்களின் உதவி உடன் அறிவுரை உடன் உங்கள் உடல் மற்றும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆகியவை ஏற்று கொள்ளும் விதத்தில் பாதுகாப்பான சில உடல்பயிற்சிகளை அன்றாடம் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் செய்கிறீர்களா என்பதை கவனிக்க நிச்சயம் உங்களுக்கு ஒரு நபரின் அக்கறை தேவை.                                       

ஊட்டச்சத்து உணவுகள்

சமசீரான சத்தான உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை மூளை ஆரோக்கியம் போன்றவை சரியாக இருக்கும். நீங்கள் சரியாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தை சரியாக உங்களுக்குள் வளரும். ஆகவே ஊட்ட சத்து மிக்க உணவுகள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும். பிடிக்காவிட்டாலும் உங்கள் வயிற்றில் வளரும் இன்னொரு உயிருக்காக நீங்கள் சில உணவுகளை சாப்பிட்டாக வேண்டும். தாய்மையின் தியாகம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

மருந்துகளை நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

பெரும்பாலும் மனிதர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. உடல்நிலை சரியாக வேண்டி மருத்துவரிடம் செல்வோம். இரண்டு நாள் மாத்திரையில் உடல் நன்றாகி விட்டால் தொடர்ந்து மாத்திரையை சாப்பிடாமல் தவிர்த்து விடுவோம்.

தாய்மை அடைந்த பெண்கள் அப்படி இருக்க கூடாது. மருத்துவர்கள் தரும் மாத்திரைகள் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கானவை. உங்களுக்கானவை அல்ல. உங்கள் குழந்தைக்கான மருந்துகளை நீங்கள் ஒருபோதும் நிறுத்தி விட கூடாது.

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்

தாய்மை அடைந்திருக்கும் சமயங்களில் நோய் தொற்றுக்கள் தாய்மார்களை எளிது தொற்றிக் கொள்ளும். அதை விடவும் வயிற்றில் உள்ள குழந்தையையும் அது பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே நீங்கள் தாய்மை அடைந்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் சுற்றுப்புறங்கள் நீங்கள் பயன்படுத்தும் பொருள்கள் குளியல் அறை கழிவறை போன்றவை சுகாதாரமானதாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தும் போது கிருமி நாசினியை பயன்படுத்தி விட்டே உபயோகப்படுத்துங்கள்.

திட்டமிடுங்கள்

உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால் அது பிறந்த உடன் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்த தொலைநோக்கு பார்வை உங்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதற்காக இப்போதே ஒரு டைரியில் உங்கள் எதிர்கால திட்டங்களை குறித்து வையுங்கள்.

அதற்காக குழந்தைக்கு கல்யாணம் செய்து வைப்பது வரைக்கும் எல்லாம் யோசிக்க வேண்டாம். முதல் ஐந்து வருடங்களுக்கான திட்டங்களை நீங்கள் தீட்டுவது நல்லது. குறைந்த பட்சம் மூன்று வயது வரைக்குமான திட்டங்களையாவது எழுதி வைப்பது உங்களுக்கு பலவிதங்களில் உதவி செய்யும்.

எடை அதிகரித்தல்

உங்கள் எடையை கண்காணிக்க வேண்டும். தாய்மை அடைவதில் உள்ள பெரும் சிரமம் என்ன என்றால் உங்களோடு சேர்த்து இன்னொரு உயிரையும் நீங்கள் சுமக்கிறீர்கள். ஆகவே உங்கள் எடை இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் இருந்து எடை அதிகரிக்க தொடங்கும். மாதம் 1 கிலோ எடை கூடுதல் என்பது இயல்பான அளவு. இது ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்ப மாறுபடும்.

எடை

நீங்கள் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவுகள் மாத்திரைகள் எல்லாம் உங்கள் தனிப்பட்ட எடையை அதிகரிக்கும். ஆனால் அதுதான் சரியான ஆரோக்கியமான கர்ப்ப காலம் என்பதை உணருங்கள். குழந்தை பிறப்பிற்கு பின்னர் இயல்பாகவே எடை குறையும். உடற்பயிற்சிகளும் செய்யலாம்.

உங்கள் உமிழ்நீரை உற்பத்தி செய்யும் உணவுகள்

இந்த மாதிரி தாய்மை அடைந்த நேரங்களில் நமது உடலில் உள்ள விட்டமின் அளவிற்கேற்ப உடலே சில விஷயங்களை கேட்டு பெறும். ஆகவே மாங்காயோ சாம்பலோ பென்சிலோ புளிப்பு மிட்டாயோ உங்களுக்கு பிடித்தமானதை கவலை இல்லாமல் சாப்பிடுங்கள்.

pixabay, youtube, shutterstock

குழந்தை பேற்றுக்கு பின்னர் தோன்றும் மன அழுத்தம்

நிறைய தாய்மார்களுக்கு தாங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கலாம். 20 முதல் 30 சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. ஒருவேளை அடிக்கடி கோபம் எரிச்சல் பிடித்த விஷயங்களில் நாட்டமின்மை கவலை பயம் போன்றவை இருந்தால் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் அதை பற்றி பேச வேண்டும். அவர்கள் அதற்கு தேவையான தீர்வுகளை பரிந்துரைப்பார்கள்.

நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

கறி , முட்டை மற்றும் மீன்

அசைவம் சாப்பிடும் தாய்மார்கள் ஆட்டுக்கறி முட்டை மற்றும் மீன்களை அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்து கொண்டு வரலாம். 6 மாதங்களுக்கு மேல் கருப்பை பெரிதாவதால் ஜீரண உறுப்புகள் தாமதமாகவே வேலை செய்யும். ஆகவே அந்த சமயங்களில் உங்கள் எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டி வரலாம். மீன்கள் சாப்பிடும் போதும் அளவாகவே சாப்பிடுங்கள். அதிக மீன்கள் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம்.

பழங்கள் காய்கறிகள்

ஊட்ட சத்தும் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிற காய்கள் மற்றும் கீரைகளை நன்றாக கழுவி அதன் பின்னர் சமைப்பது குழந்தைக்கு நல்லது.

பால் பொருள்கள்

கால்சியம் குழந்தையின் முடி வளர்ச்சி எலும்பு உருவாதல் நகங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய கால்சியத்தை அதிகம் கொண்டிருக்கும் பால் பொருள்களை நீங்கள் தாய்மை அடையும் சமயத்தில் எடுத்துக் கொள்வது உங்களுக்கும் குழந்தைக்கும் நன்மை தரும். தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

காஃபி

தாய்மை நேரங்களில் ஒவ்வாமை காரணமாக வாந்தி மயக்கம் போன்ற பித்தங்களால் உடல் பாதிக்கப்பட்டிருக்கும். ஆகவே அதிக அளவில் காஃபி எடுத்து கொள்ள கூடாது. வழக்கமானதை விட குறைவான அளவே எடுத்தல் குழந்தைக்கு நன்மை தரும்.

பருப்பு வகைகள்

குழந்தையின் வளர்ச்சிக்கு பருப்பு வகைகள் அவசியம் தேவை .. ஆகவே கர்ப்ப காலத்தில் தினமும் ஏதாவது ஒரு பருப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சாம்பார் போன்றவை சேர்த்து கொண்டாலும் தனிப்பட்ட முறையில் பருப்பை வேகவைத்து ஒரு கப் அளவிற்கு சாப்பிடுவது நன்மை தரும். அதிக மசாலாக்களை தவிர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளை அது பாதிக்கலாம்.

முழு தானியங்கள்

இப்போது உலகமே ஆர்கானிக்கிற்கு மாறி வருகிறது. முன்னோர்களின் அருமையை நல்லவேளையாக நாம் இப்போதே உணர்ந்து கொண்டோம். தாய்மை காலங்களில் பிரசவ நேரத்தின் வலியை தாங்கி கொள்ள உடலுக்கு வலு தேவை. ஆகவே தாய்மை அடைந்த நேரங்களில் சிறு தானியங்களை மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பாதி சமைக்கப்பட்ட மீன்

மீன் உணவு என்பது பலவித சத்துக்கள் அடங்கி இருந்தாலும் அதில் சமைப்பதில் கவனம் தேவை. பாதி சமைக்கப்பட்ட மீன் உணவுகள் உங்கள் குழந்தை உயிருக்கே ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். ஒரு சிலர் மீனை பச்சையாகவே சாப்பிடுவார்கள். அந்தப் பழக்கத்தை மறந்து விடுங்கள்.

பச்சை முட்டை

நிறைய பெண்களுக்கு உடல் ஆரோக்யம் பற்றிய அக்கறை இருக்கிறது. விளையாட்டில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பச்சை முட்டை என்பது அவசியம். தாய்மை காலங்களில் பச்சை முட்டை ஆப் பாயில் போன்றவைகளை அறவே தவிர்த்து முழுமையாக வேகவைக்கப்பட்ட முட்டைகளை உண்ணுங்கள் /

பச்சை காய்கறிகள் தானியங்கள்

பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிட வேண்டும் என்பவர்கள் கர்ப்ப காலங்களில் அதனை தவிர்த்து விடுங்கள். முளை கட்டிய தானிய வகைகளை ஒரு சிலர் பச்சையாகவே சாப்பிடுவார்கள். அது ஆரோக்கியமானது என்றாலும் கூட தாய்மை நேரங்களில் ஜீரண சக்தி பாதிக்கப்படுவதால் இப்படிப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

தாய்மை நேரங்களில் வேலை செய்ய முடியாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சமைக்க தோன்றலாம். அதனை செய்யாதீர்கள். அதில் உள்ள ரசாயனங்கள் குழந்தையின் உடலுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

தாய்மை அடையும் நேரம் நீங்கள் உங்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய காலம். இதில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களும் கூடவே நீங்கள் செய்ய கூடாத விஷயங்களும் சில இருக்கின்றன.

முதல் மூன்று மாதம்

இந்த சமயங்கள் உங்கள் பெண்மைக்கு சவால் ஆனவை. உடலில் ஒரு உயிர் உருவான பின்னர் இதுநாள் வரை அது பழகியிராத புது சூழ்நிலைக்கு ஆளாகிறது. காலை நேர ஒவ்வாமை, வாந்தி, மயக்கம் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தல் போன்றவை இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் ஓய்வாகவே இருக்க வேண்டி வரலாம்.

இந்த நேரங்களில் நீங்கள் உங்கள் பயிற்சியாளர் மற்றும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் உடல்பயிற்சி முறைகளை மாற்ற வேண்டும். வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த பயிற்சிகளையும் பண்ண வேண்டாம்.

உங்கள் உடல் நிலை மாற்றங்கள் பற்றி உங்கள் துணையோடு பேச வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டிய காலமும் இதுதான்.

நான்கு முதல் ஆறு மாதம் வரை

கொஞ்சம் கடினமாக காலங்களை நீங்கள் கடந்து விட்டீர்கள். கரு சிதைவு ஏற்படும் அபாயங்களில் இருந்து நீங்களும் உங்கள் குழந்தையும் தப்பித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது சத்தான உடல் வலிமை தரும் உணவுகள் மற்றும் மாத்திரைகள். சுகப்ரஸவத்திற்கான உடல் பயிற்சிகள் ஆகியவைதான்.

இந்த நேரங்களில் தெரபி போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள். அம்மா ஆக போகும் பெண்களுக்கான மன மற்றும் உடல் ரீதியான வலிமைகளை இந்த மாதிரியான தெரபி சிகிச்சைகள் தருகின்றன. உங்கள் வயிற்று பகுதியை பாதிக்காத ஸ்பா போன்றவற்றையும் நீங்கள் செய்யலாம். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

7 ம் மாதம் முதல் 10 ம் மாதம் வரை

இந்த காலங்களில் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சத்தான உணவுகள் அமைதியான சூழல் போன்றவை உங்கள் குழந்தைக்கு அவசியம். நல்ல இசையை கேளுங்கள். நல்ல விஷயங்களை பேசுங்கள். உங்கள் குழந்தையோடு உரையாடுங்கள்.

பயணிக்க இது நல்ல காலம். அதனால்தான் முன்னோர்கள் 7 ம் மாதம் வளைகாப்பு நடத்தி பிறந்த வீட்டுக்கு பயணிக்க வைத்தார்கள். கால்களில் நரம்பு பிடிக்கும். அடிக்கடி கால்களை நீட்டி மடக்கவும்.

உறக்கம் என்பது சிரமமாக இருக்கும். ஒருக்களித்து படுப்பதே குழந்தைக்கு நல்லது. கால்களை பெடிக்யூர் மூலம் மசாஜ் செய்யலாம். உடலின் கனத்தை சுமக்கும் கால்களுக்கு இதமாக இருக்கும். நிறைய ஓய்வு நல்ல புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை செய்யுங்கள்.

pixabay, youtube, shutterstock

பொதுவான தடைகள்

புகைபிடிக்க கூடாது

இப்போது பெண்களும் புகை பிடிக்கிற காலமாக இருப்பதால் கர்ப்ப காலங்களில் அதனை தவிருங்கள். புகைபிடிப்பவர் அருகிலேயும் நீங்கள் இருக்க கூடாது.

மது அருந்த கூடாது

மது என்பது இப்போது சமூகபானம் என்பதால் தாய்மை அடைந்திருக்கிறோம் என்பதை அறிந்த உடனே மது அருந்துவதை நிறுத்தி விடுங்கள்.

நீர் அருந்துங்கள்

நீர்ச்சத்து உங்களுக்கு பிரசவ நேரத்தில் அதிகம் வீணாகும். ஆகவே முடிந்தவரை நீரை எடுத்துக் கொள்ளுங்கள். பழரசங்களை சர்க்கரை இல்லாமல் பிழிந்து சாப்பிடுங்கள்.

அதிகமாக தூங்குங்கள்

நிறைய ஓய்வும் தூக்கமும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக நல்லது. ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் அதிக அளவில் ஓய்வெடுத்திருக்க வேண்டும்.

மன அழுத்தம் தேவை இல்லை

மற்ற கவலைகள் மன அழுத்தங்கள் போன்றவற்றை மறந்து விடுங்கள். உங்கள் வயிற்றுக்குள் வளரும் குட்டி உயிரை பத்திரமாக வளர்ப்பதில் இந்த பூமிக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் கவனம் வையுங்கள்

தாய்மை குறித்து அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் FAQ

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதற்கான அடையாளங்கள் என்ன?

உங்கள் மாதவிலக்கு தள்ளி போவது தான் முதல் அடையாளம். 45 நாட்களுக்கு மேல் மாதவிலக்கு நடக்காவிட்டால் நீங்கள் வீட்டிலேயே கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ள முடியும். மேலும் வாந்தி காலை நேர சோர்வு மயக்கம் போன்றவை உங்களுக்கு தொடர்ந்து இருக்கலாம்.

நான் தாய்மை அடைந்திருக்கையில் எப்படி உறங்க வேண்டும்?

முதல் மூன்று மாதங்கள் நீங்கள் வழக்கமான நிலைகளில் உறங்கலாம். குப்புறப்படுக்க கூடாது. அதன் பின்னர் நீங்கள் ஒருபக்கமாகவே உறங்க வேண்டும். மற்ற நிலைகளில் படுத்தாள் குழந்தைக்கு மூச்சு திணறல்கள் ஏற்படலாம்.

பிரசவ நேர பசி எப்போது வரும்?

தாய்மை நேரங்களில் அதிகம் பசிக்கும். இரண்டு உயிர்களுக்கான உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். ஆகவே எப்போது வேண்டுமானாலும் இது தொடங்கலாம். பெரும்பாலும் ஐந்து வாரங்களுக்குள் இந்த பசி உங்கள் தொடங்கும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி நடக்கலாம்.

சுடுநீரில் குளிப்பது குழந்தையை பாதிக்குமா?

மிதமான சூட்டில் குளிப்பது குழந்தைக்கு நல்லது. ஒரு சிலர் பாத்டப்பில் சுடு நீர் நிரப்பி குளிப்பார்கள். தாய்மை நேரங்களில் பாத்டப் குளியலை விட ஷவர் குளியல் நல்லது. அல்லது முன்னோர் வழியில் அண்டாவில் தண்ணீர் நிரப்பி யாரையாவது ஊற்ற சொல்லி குளிக்கலாம்.

 

pixabay, youtube, shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shop ல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle