Food & Nightlife

மணக்கும் பாறை மீன் குழம்பு – சமைத்து அசத்துங்கள் !

Deepa Lakshmi  |  Dec 22, 2019
மணக்கும் பாறை மீன் குழம்பு – சமைத்து அசத்துங்கள் !

மீன் குழம்பு என்றாலே அசைவ பிரியர்களுக்கு நாக்கில் நீர் ஊரும். அதிலும் கடல் மீன்களின் சுவையே தனி. கடல் மீன்களில் ஒரு வகை மீன் தான் பாறை மீன். இது தன்னை தாக்க வரும் மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பிக்க கடல்களில் உள்ள பாறையோடு பாறையாக ஒட்டி மாறிவிடும். அதனால் இதனை பிடிக்க வந்த விலங்குகள் இதனை கண்டுபிடிக்க முடியாமல் சென்று விடும்.

இப்படி தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ளும் மீன்களை பாறை மீன்கள் என்கிறோம். அப்படி உயிரை காப்பாற்றிக் கொண்டாலும் எப்படியும் நம் வீட்டுக் குழம்பில் விழுந்து விடுவதுதான் அவைகளின் விதியாகும்.
பாறை மீன்களில் முட்கள் அதிகம் இருக்காது. அதன் தோல் முழுதும் சீவிய பின்னரே வெட்டிக் கொடுக்க சொல்ல வேண்டும்.

மிகவும் அருமையான சுவை கொண்ட பாறை மீன் குழம்பு (fish curry) எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

 

Youtube

பாறை மீன் குழம்பிற்கு தேவையான பொருள்கள்

பாறை மீன் – 1/2 கிலோ.

சின்ன வெங்காயம் – 100 கி.

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 6 (நடுவில் கீறிக்கொள்ளவும்)

தேங்காய் – பெரிய மூடி 1

ஜீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு.

மிளகாய் தூள் – 2 1/2 – தே.க 

மல்லித்தூள் – 2 தே.க. 

மஞ்சள் தூள் – 1/2 தே.க. 

மாங்காய் – 1 முழுவதும் 

தேங்காய் எண்ணெய் – 4 தே.க. 

உப்பு – ருசிக்கு தகுந்தவாறு.   

Youtube

பாறை மீன் குழம்பு எப்படி செய்வது ?

முதலில் வாங்கிய மீனை நன்கு கழுவி சுத்தமாக வைக்கவும். லேசாக கல் உப்பு மஞ்சள் சேர்த்து கழுவினால் நல்லது.

பின்னர் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மையாக நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கொடுக்கப்பட்ட அளவுள்ள புளியை எடுத்து பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஊற வைக்க வேண்டும்.

சின்ன வெங்காயங்களை தோல் உரித்து நீள நீளமாக அறிந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்களை கீறி வைக்க வேண்டும். மாங்காயை துண்டாக நறுக்கி வைக்க வேண்டும்.

அடுப்பில் மண்சட்டி இருந்தால் மண்சட்டி வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடவும். மண்சட்டி இல்லாதவர்கள் சாதாரண வாணலியை பயன்படுத்தலாம். எண்ணெய் நன்கு காய்ந்த உடன் சீரகம் போடவும். சீரகம் பொரிய ஆரம்பிக்கும்போது வெந்தயத்தை போடவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் பச்சைமிளகாயை சேர்க்கவும்.

நன்றாக வதங்கிய பின்னர் தக்காளிகளை கொட்டி வதக்க வேண்டும். தக்காளிகள் மிருதுவாகும் வரை வதக்க வேண்டும். அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலாவை அதில் ஊற்ற வேண்டும். இரண்டு முதல் நான்கு நிமிடம் வரை வதக்கி அதன் பின்னர் புளித்தண்ணீரை வடிகட்டி குழம்பில் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் குழம்பு கொதித்த பின்னர் கழுவி வைத்திருக்கும் மீன்களை போட்டு அதனுடன் உப்பும் சேர்க்கவும். 10 நிமிடங்கள் ஆனதும் நறுக்கி வைத்த மாங்காயை இறுதியாக சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கவும்.

இந்த முறையில் பாறை மீன் குழம்பு மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த வகையான மீனாக இருந்தாலும் இப்படிக் குழம்பு வைத்தால் மணம் ஊரைக் கூட்டும். ருசி ஆளைத் தூக்கும்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Food & Nightlife