Lifestyle

நமது அன்றாட வாழ்வில் தண்ணீரை எப்படி சேமிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம்!

Swathi Subramanian  |  Aug 27, 2019
நமது அன்றாட வாழ்வில் தண்ணீரை எப்படி சேமிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பின்  முக்கியத்துவம்!

பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பெருகி வரும் மக்கள் தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. தண்ணீரை எப்படி சேமிப்பது, அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு காணலாம். 

pixabay

தண்ணீர் மற்றும் அதனை சேமிப்பதின் முக்கியத்துவம் (Importance Of Water And Why Do We Need To Save Water)

நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கியுள்ளது. தேவையான அளவு தண்ணீரைச் சேமிக்காதது, இருக்கிற தண்ணீரைத் தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தாதது ஆகியவை தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. சென்ற ஆண்டு போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சத்தின் தாக்கம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே இருக்கிறது. தண்ணீர் பஞ்சத்தைத் தீர்ப்பதற்குத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமையே. 

இருப்பினும் தனிமனிதர்கள் தண்ணீரை தங்கள் தேவைக்கு மட்டும் நீரை சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல நீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு  நம்மால் இயன்ற அளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைப்பிடிப்போம். இயன்ற அளவு நீர் நிலைகளை பாதுகாப்போம்.

மேலும் படிக்க – மழை நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள் : ஈசியாக செய்யலாம்!

pixabay

பூமியானது 70 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. மீதி இருக்கும் 30 சதவீதத்தில் தான் நாடும், காடும், மலையும் எல்லாமும் அடங்கியுள்ளது. 70 சதவீத நீர் என்றாலும் அதில் 97.5 சதவீத நீரானது கடல் நீர். அதாவது உப்பு நீர். அப்படியென்றால் 2.5% மட்டுமே பயன்படுத்த தகுதியான நீராகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகள். இவையெல்லாம் போக மிஞ்சியிருக்கும் சொற்ப அளவே நாம் பயன்படுத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர். உலக அளவில் உள்ள நிலத்தடி நீரில் 24% நிலத்தடி நீரை இந்தியா பயன்படுத்துகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தண்ணீரின் தேவை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஆனால் சுற்றுச்சூழல் மாற்றம், பருவமழை மாற்றம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 60 கோடி மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2050ம் ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்கள் பில்லியனை தொடலாம் என்றும் கூறப்படுகிறது. 2040ம் ஆண்டுகளில் உலக அளவில் 33 நாடுகள் பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க – முட்டை – எப்படி உங்கள் உடல் நலன் மற்றும் சரும அழகை மேம்படுத்த உதவுகின்றது?

ஜல் சக்தி அபியான் திட்டம் (Jal Sakthi Abhiyan Campaign)

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ‘ஜல்சக்தி அபியான்’ என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மத்திய-மாநில நீர் வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள என்ஜினீயர்கள், அதிகாரிகள் பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். 

pixabay

தண்ணீரை சேமிப்பதற்கான உதவிக்குறிப்புகள் (Water Saving Tips)

தண்ணீரை சேமிக்க நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். நமது அன்றாட வாழ்வில் நாம் செலவு செய்யும் தண்ணீரை கொஞ்சம் சிக்கனமாக பயன்படுத்தினாலே தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை நாம் மிச்சப்படுத்த முடியும். நமது வீட்டில் நாள்தோறும் குளியலறை, சமையலறை மற்றும் வீட்டில் சுற்றுப்புறத்தில் உபயோகிக்கும் நீரை எப்படி சேமிக்கலாம் என இங்கு காண்போம்.

குளியலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In The Bathroom)

1. குளிக்க வாளியை பயன்படுத்தவும் (Use Bucket For Bath)

நம் அன்றாட வாழ்வில் நீரை சேமிப்பதன் மூலம் பெருமளவு தண்ணீரை நாம் மிச்சபடுத்த முடியும். குளிக்க ஷவரை பயன்படுத்தாமல் வாளியை பயன்படுத்த வேண்டும். முதலில் வாளியில் தேவையான தண்ணீரை நிரப்பி குளிக்க செல்ல வேண்டும். பைப்பை அல்லது ஷவரை திறந்து குளிப்பதால் நமக்கு தெரியாமலே நிறைய தண்ணீர் செலவாகும். குளிப்பதற்கு குறைந்த அளவு நீரையே பயன்படுத்துங்கள். 

2. பல் துலக்கும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap While Brushing Your Teeth)

அன்றாடம் நாம் பல் துலக்கும் போது தண்ணீரை அணைப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலோனோர் தண்ணீரை அணைக்காமல் பல் துலக்குகின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது. பற்களைத் துலக்கும் போது தண்ணீரை அணைத்தால் ஒரு நாளைக்கு 13 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இதனால் பைப்பை முடி பல் துலக்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க – வாழை நாரில் இருந்து நாப்கின் தயாரித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை : 120 முறை பயன்படுத்தலாம்!

3. முகம் மற்றும் கைகளை கழுவும்போது பைப் திறக்க கூடாது (Turn Off Tap While Washing Face And Hand)

குழாயை திறந்து முகம், கை,கால் கழுவுவதை விட பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து கப் மூலம் முகம்,கை, கால்களை சுத்தம் செய்யலாம். தினமும் இரு முறை முகம் மற்றும் கைகளை கழுவு பழக்கம் உள்ளவர்கள் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். 

pixabay

4. பைப் கசிவுகளை சரிசெய்யவும் (Fix Your Leaks)

உங்கள் வீட்டில் நீர் கசிவு இருக்கிறதா என அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் பலவீடுகளில் நீர் கசிவுகள் மறைந்து காணப்படுகின்றன. குழாய் போன்ற உபகரணங்களின் கசியும் பழுதை உடனடியாக சரி செய்து விடுங்கள். ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசியுமானால் ஆண்டொன்றுக்கு சுமார் 10,200 லிட்டர்கள் நீர் வீணாகும். எனவே சிறிதளவு நீர் தானே என கவனக்குறைவாக இருக்காமல் உடனடியாக சரி செய்து விடுங்கள். 


5. ஷேவிங் செய்யும் போது கழுவும்போது பைப்பை மூடவும் (Turn Off Tap While Washing While Shaving)

ஷேவிங் செய்யும் போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்தே வைத்திருந்து தண்ணீரை வீணே ஓட விடாதீர்கள். சுடுநீருக்காக காத்திருக்கும் பொழுதே முகச்சவரம் செய்து விடுங்கள். பின் குவளையில் நீர் நிரப்பி முகம் கழுவுங்கள். ஷேவிங் செய்யும் போது நுரையை துணியால் துடைத்து விட்டு பின்னர் சிறிதளவு நீரில் முகம் கழுவலாம். இதனால் தண்ணீர் சேமிக்கப்படும். 


6. தற்போதைய தொழில்நுட்ப பைப்புகளை பயன்படுத்துங்கள் (Use Advance Technology Tap)

தற்போதைய தொழில்நுட்ப குழாய்களை அனைவரும் தங்களது இல்லத்தில் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக நுண் துகளாக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது புதிய குழாய்கள் வந்துள்ளன. இவை குழாயில் இருந்து வரும் தண்ணீரை பனி போன்ற துாறலாக வெளியேற்றும். இதனால் தண்ணீர் ஓட்டம் ஒரு நிமிடத்திற்கு 12 லி., என்பது 600 மி.லி.,யாக குறைகிறது. இதனால் ஒரு நாளைக்கு 35 லி., தண்ணீரை சேமிக்கலாம். இதேபோல் சென்சார் பொருத்திய குழாய்களும் பொருத்தலாம். நாம் கையை நீட்டும் போது மட்டும் தண்ணீர் வரும் என்பதால் நீர் வீணாகாது. 

pixabay

7. ஷவரை குறைவாக பயன்படுத்தவும் (Avoid Shower)

ஷவரில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் குறைத்து அளவு நீரில் குளிப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் ஷவரில் குளிக்கையில் ஷாம்பூ மற்றும் சோப்பு போடுகையில் ஷவரில் நீரை ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஷாம்பூ போடும் போது ஷவரை அணைத்துவிட்டு பின்னர் அதன் திறந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாகவும் நீரை சேமிக்கலாம்.

8. பிளஷ் செய்ய பயன்படுத்திய நீரை முறைப்படுத்தவும் (Reuse Water For Flush)

டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. உங்களிடம் இரட்டை ஃபிளஷ் டாய்லெட் இருந்தால் பொருத்தமான சமயங்களில் அரை ஃபிளஷ் பட்டனை உபயோகியுங்கள். இதன் மூலம் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 36,000 லிட்டரை சேமிக்கலாம். மேலும் பிளஷ் செய்ய கை கழுவிய நீரை பயன்படுத்தலாம். வாஷ் பேசில் காய் கழுவும் நீரை, நேரடியாக பிளஷ் குப்பிக்குள் விடலாம். இதனால் வீணாகும் நீரை பயன்படுத்தலாம். 

சமையலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In The Kitchen)

1. வீணாகும் நீரை பயன்படுத்துங்கள் (Reuse Water)

காய்கறிகள், பாத்திரங்கள் கழுவும் போது அதிகளவு நீர் வீணாகி சாக்கடைக்குள் செல்கிறது. இதை தவிர்க்க அந்த நீரில் உள்ள கழிவுகளை வடிகட்டி ஒரு தொட்டியில் அல்லது பாத்திரத்தில் சேமிக்கலாம். இப்படி சேமித்த நீரை வாசல் தெளிக்க, தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டியில் அழுக்குப் படிந்திருந்தால் குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். இந்த நீரில் படிகாரக் கல்லை போட்டால் நீர் தெளிந்து விடும். பின்னர் இதனை பயன்படுத்தலாம். 


2. டிஷ் வாஷரை குறைவாக பயன்படுத்துங்கள் (Less Use Of Dish Washer)

டிஷ்வாஷர் எனப்படும் பாத்திரம் விலக்கும் மெஷின் அதிக நீரை எடுத்து கொள்ளும். பாத்திரங்கள் விலக்க இந்த மெஷின் முழுவதும் நீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். டிஷ்வாஷரில் ஒரு முறை பாத்திரங்களை கழுவினால் 8 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இருப்பினும் டிஷ்வாஷர் முழுவதுமாக நிறைந்த பிறகு அதை பயன்படுத்த வேண்டும். இதனால் முடிந்த அளவிற்கு டிஷ்வாஷரில் பாத்திரம் விலக்குவதை தவிர்க்க வேண்டும். 


3. கையால் பத்திரங்களை கழுவ வேண்டும் (Wash Dish By Hand Only)

சமையல் வேலைகள் முழுமையாக முடிந்த பின் ஒரே நேரத்தில் அத்தனை பாத்திரங்களையும் கழுவ வேண்டும். குழாயை திறந்துவிட்டு நேரடியாக பாத்திரங்களை கழுவாமல் பெரிய பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு கழுவினால் தண்ணீர் மிச்சமாகும். டிஷ்வாஷரில்  பாத்திரங்கள் கழுவினால் நீர் அதிகம் செலவாகும். அதனால் கையால் பாத்திரம் கழுவி நீரை மிச்சப்படுத்தலாம். 

pixabay

4. பாத்திரங்கள் துலங்கும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap While Dish Wash)


கையால் பாத்திரம் கழுவும் போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும் அதை கழுவுவதற்கும் குறைவான நீரே தேவைப்படும். பாத்திரங்கள் துலங்கும் போது பைப்பை மூடி விட வேண்டும். அனைத்து பாத்திரங்களையும் துலக்கிய பின்னர், பைப்பை திறந்து கழுவ வேண்டும். 


5. காய்கறிகளை பாத்திரத்தில் வைத்து கழுவுங்கள் (Use Pot For Wash Vegetables)


சிலர் ஒவ்வொரு விதமான காய்கறிகளையும் தனித்தனி பாத்திரங்களில் நீர் நிரப்பி கழுவுகிறார்கள். இதனால் அதிகளவு தண்ணீர் செலவாகிறது. காய்கறிகளை வெட்டியதும் ஒரே பாத்திரத்தில் போட்டு கழுவினால், பல லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். மேலும் காய்களை பாத்திரத்தில் வைத்து கழுவுவதால், கழுவிய பின்னர் அந்த நீரை செடிகளுக்கு ஊத்தலாம். 


6. முடிந்தவரை நீராவியில் காய்களை வேக வைக்கவும் (Steam Whenever Possible)


காய்கறிகளை முடிந்த வரை நீராவியில் காய்களை வேக வைக்க வேண்டும். காய்களை வேக வைக்க அதிக தண்ணீர் தேவைப்படும். மேலும் நிறைய நேரமும் எடுத்து கொள்ளும். நீராவியில் காய்களை வேக வைத்தால் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும். மிகவும் குறைந்த நேரத்தில் காய்கள் விரைவில் வெந்து விடும். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரே தேவைப்படும். 

pixabay

7. நீர்ப்பாசன குழாய்களை நிறுவவும் (Install Water-Efficient Faucets)

சமையலறையில் நீர்ப்பாசன குழாய்களை நிறுவ வேண்டும். பாத்திரம் விலக்கும் டப்பை கழுவ  நிறைய தண்ணீர் தேவைப்படும். அதற்கு சுழலும் குழாய்யை பொறுத்த வேண்டும். அதனால் ஈசியாக குறைந்த நீரிலே டப்பை கழுவி விடலாம். மேலும் சென்சார் பொருத்திய குழாய்களை வீடுகளில் பொறுத்த வேண்டும். இதனால் நம் தேவைக்கு மட்டும் தண்ணீர் பயன்படுத்த முடியும் என்பதால் நீர் வீணாகாது. 

8. அழுக்கு உணவுகளை கழுவுவதை தவிர்க்கவும் (Avoid Rinsing Dirty Dishes)

சமையல் பாத்திரம் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை சாப்பிட்டவுடன் கழுவி விடுங்கள். காய்ந்தால் கூடுதல் நீர் தேவைப்படும். மேலும் சாப்பிட்ட தட்டுகள், சமைத்த பாத்திரங்களை எடுத்து வெளியே போட்டு விட்டு பாத்திரம் விலக்கும் இடத்தில் போட வேண்டும். இல்லையென்றால் அந்த கழிவுகளால் உண்டாகும் அழுக்குகளையும் கழுவ பொரும்பாலான தண்ணீர் தேவைப்படும். இதனால் அழுக்கு உணவுகளை அப்படியே போடுவதை தவிர்த்தால் தண்ணீரை மிச்சமாக்கலாம். 

துணி துவைத்தலில் தண்ணீரை சேமித்தல் (Saving Water While Washing Clothes)

1. உங்கள் பழைய சலவை இயந்திரத்தை மாற்றவும் (Repace Your Old Washing Machine)

 உங்கள் பழைய சலவை இயந்திரத்தின் செயல்திறன் குறைந்தால், அதனை உடனடியாக மாற்றி விடுங்கள். ஏனெனில் பழைய சலவை இயந்திரங்கள் சேதமானால் நீர் கசியும். இதனால் நாம் நிரப்பும் நீர் வீணாகும் என்பதால் புதிய இயந்திரத்தை வாங்குவது நல்லது. மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.


2. வெற்று சலவை இயந்திரத்தை இயக்க வேண்டாம் (Dont Run Empty Washing Machine)

சலவை இயந்திரத்தில் துணிகளை நிரப்பாமல் வெற்றாக இயக்க வேண்டாம். எப்போதும் சலவை இயந்திரம் முழு கொள்ளளவை எட்டும் வரை பொறுத்திருந்து துணிகளை துவைக்க வேண்டும். சலவை இயந்திரம் முழுவதும் நீரை நிரப்பி வேற்று இயந்திரத்தை இயக்குவதால் எவ்வித பலனும் இல்லை. இதனால் பெரும்பாலான தண்ணீர் வீணாவது மட்டுமின்றி மின்சாரமும் வீணாகிறது. 


3. குறைந்த ஓட்டன் கழுவ வேண்டும் (Wash Less Often)

சலவை இயந்திரத்தில் துணியைப் போடும் போது, அதன் முழு கொள்ளளவிற்கு துணிகளைப் போடுவது நல்லது. குறைவாக போட்டாலும், நிறைத்துப் போட்டாலும் ஒரே அளவிற்கான நீரைத் தான் சலவை இயந்திரங்கள் எடுத்து கொள்ளும். வாஷிங் மெஷினை “டிரெய்ன்” செய்யும் போது வெளியேறும் சோப் தண்ணீரை வீணாக பாத்ரூமில் விடுவதைக் காட்டிலும், எண்ணெய் பிசகு வாய்ந்த சமையல் பாத்திரங்களை அதில் ஊறவைக்கலாம். அல்லது கால் மிதி, சாக்ஸ் போன்றவற்றை ஊற வைக்கலாம்.

pixabay

4. சலவை இயந்திரத்தை அதிகமாக பயன்படுத்தாதீர்கள் (Stop Over Flow)

வீடுகளில் சேரும் அழுக்கு துணிகளை ஒரே நேரத்தில் துவைப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலும் கையில் துவைப்பதை பழக்கப்படுத்தி கொள்வதே நல்லது. இதனால் குறைந்த அளவிலே தண்ணீர் தேவைப்படும். கையில் துவைப்பதால் குறைந்த அளவு தண்ணீரில் பெரும்பாலான துணிகளை துவைத்து விடலாமா. சலவை இயந்திரத்தின் தேவையை குறைத்துக் கொள்வதன் மூலமும் தண்ணீர் சிக்கனம் ஏற்படும். 

5. கார் கழுவிய நீரை மீண்டும் பயன்படுத்துங்கள் (Reuse Water For Car Wash)

கார் கழுவிய நீரை துணிகள் ஊறவைக்க பயன்படுத்தலாம். பெரும்பாலும் பக்கெட்டுகளில் தண்ணீரை வைத்து துணிகளால் காரை துடைப்போம். இந்த நீரை வீணாகாமல் துணிகளை ஊறவைக்கலாம். பின்னர் நல்ல தண்ணீரில் நாம் துவைத்து, அலசுவதால் எவ்வித சேதாரமும் துணிகளுக்கு ஏற்படாது. எனவே கார் கழுவ பயன்படுத்தும் நீரை துணி துவைக்க மீண்டும் பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். 

6. துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள் (Use Cold Water To Wash) 

சலவை இயந்திரத்தில் துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும். கறைகள் படிந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடும் போது குளிர்ந்த நீரில் அலசினால் துணியில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். இதனால் துவைக்கும் போது பயன்படுத்தப்படும் நீரை மிச்சப்படுத்தலாம். மேலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதால் எளிதில் அழுக்குகள் நீங்கும். 

pixabay

வெளியில் தண்ணீரை சேமித்தல் (Saving Water Outdoors)

1. தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்த வேண்டாம் (Dont Use Pipe For Garden)

தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்துவதால் நிறைய நீர் செலவாகிறது. கோடை காலத்தில் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. செடிகளின் கீழே தரைத்தளங்களில் தென்னை நார்களை விரித்து அதில், தண்ணீர் தெளித்தாலே போதும் நீரை அது உறிஞ்சி செடிகளின் வேர்களுக்கு உயிர் கொடுக்கும். இப்படி செய்வதால் நீரும் குறைவாக செலவாகும்.

2. கார் கழுவுவதற்கு வாளியை பயன்படுத்துங்கள் (Use Bucket For Car Wash)

பெரும்பாலானோர் கார் கழுவும் போது நேரடியாக குழாய்யை பயன்படுத்துவர். குழாயில் வரும் நீரை கையில் பிடித்தவாறு கார் கழுவுவார்கள். இப்படி செய்வதால் நமக்கு தெரியாமல் கணிசமான நீர் வீணாகிறது. ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து காரை கழுவினால் தண்ணீரை சேமிக்கலாம். மேலும் அந்த நீரை செடிகளுக்கும் ஊற்றி பயன்பெறலாம். 

3. நீர் ஆவியாவதை குறைக்க நீச்சல் குளங்களை முடி வையுங்கள் (Cover Swimming Pools to Reduce Evaporation)

தற்போது வீடு, பார், விடுதிகளில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம் பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதால், கோடை காலத்தில் பெரும்பாலான நீர் ஆவியாகிவிடுகிறது. இப்படி குறையும் நீர் மேலும் நிரப்பப்படுகிறது. இதனால் மீண்டும் நீர் ஆவியாகி வீணாகிறது. இதனை தவிர்க்க நீச்சல் குளத்தை முடி வைக்க வேண்டும். இதனால் ஆவியாகும் நீர் குறையாமல் இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பாகவும் இருக்கும். 

pixabay

4. முடிந்தவரை கழிவு நீரை குறைக்கவும் (Reduce Waste Water Where Possible)

நம்மால் இயன்றவரை நாள்தோறும் பயன்படுத்தும் நீரில் வீணாகும் கழிவு நீரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். காய்கள், பாத்திரங்கள் கழுவ குறைந்த அளவு நீரை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் நீரை தோட்டங்களுக்கு பாய்ச்ச வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.  அரிசி கழுவிய நீரை வீட்டுத்தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால் அதுவே நல்ல ஊரமாக மாறி செடிகளை பசுமையாக்கும்.

5. நீர்ப்பாசன முறையை பராமரிக்கவும் (Maintain Your Irrigation System)

தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச நீர்ப்பாசன முறையை பராமரிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை பயன்படுத்துவதால் மரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி தண்ணீரும் சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் அதிக நீரை உறிஞ்சும் பயிர்களை பயிர் செய்வதை விடப் பருவநிலைக்கு ஏற்றத் தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்ளும் பயிர்களைப் பயிரிடலாம். 

 

pixabay

6. சுத்தம் செய்ய குழாய்க்கு பதில் துடைப்பம் பயன்படுத்தவும் (Use a Broom, Not a Hose to Clean)

அன்றாட வாழ்க்கையில் தண்ணீரை சேமிப்பது மிகவும் எளிமையானது,  புதிய வீட்டு உபகரணங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் வாங்க முடியாவிட்டால் கூட நமது வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நீரை சேமிக்கலாம். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த குழாய்களில் வரும் நீரை நேரடியாக பயன்படுத்தி சுத்தம் செய்யாமல் துடைப்பத்தால் சுத்தப்படுத்தாலாம். இதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கலாம். 

நீரைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப முறைகள் (Technical Methods To Conserve Water)

இன்றைய நவீன காலத்தில் நீரைப் பாதுகாப்பதற்கு பல்வேறு தொழில்நுட்ப முறைகள் வந்து விட்டன. இவைகளை பயன்படுத்தி நாம் தண்ணீரை சேமித்து பயன்படுத்தலாம். மேலும் நாம் அன்றாடம் எவ்வளவு நீரை பயன்படுத்துகிறோம் என்றும் தெரிந்து கொள்ளலாம். தற்போதைய தொழில்நுட்ப முறைகள் என்னென்ன உள்ளது என காண்போம்.

1. மழைநீர் சேகரிப்பு (Rainwater Harvesting)

மழை தண்ணீரை சேமித்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானபோது பயன்படுத்தி கொள்வதே மழைநீர் சேமிப்பாகும். நமது வீட்டிற்கு மேல் விழுந்து வீணாகும் மழை நீரை சேமித்து, பாதுகாத்து, சுத்தம் செய்து பயன்படுத்தலாம். தரையில் மிகக் குறைவான ஆழத்தில் அகிழிகள் அமைக்க வேண்டும். இதற்கு அடியில் மணல் நிரப்பி வைக்க வேண்டும். இந்த அகிழிகள் நீரின் அளவை 0.5 பொறுத்து 1 மீ.அகலம், 1.5 மீ ஆழம், 10-20 மீ நீளம் என்ற அளவில் அமைத்து அதில் மழை நீரை குழாய் வழியாக அனுப்ப வேண்டும். இதனால் மழை நீரை சேமிப்பது மட்டுமின்றி நிலத்தடி நீரையும் அதிகரிக்க முடியும். 

pixabay

2. குளங்கள் (Ponds)

நீர் நிலைகளில் மழைநீரை சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தூர்வாரப்பட்ட குளங்கள், கண்மாய்களில் மழை நீரை சேகரித்து வைத்தால் கோடை காலத்தில் பெரும் உதவியாக இருக்கும். இதற்கு முதற்கட்டமாக குளங்கள், கால்வாய்கள் ஆக்கிமிரப்பு செய்யப்பட்டிருந்தால் அவற்றை உள்ளாட்சி அமைப்பு நிர்வாக கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் நிலைகள் தண்ணீரை சேமிக்கலாம். இதனை மூலம் வறண்ட கோடைக்காலத்தில் தட்டுப்பாடின்றி தண்ணீர் பெறலாம். 

pixabay

3. வரலாற்று நீர்நிலைகள் (Historical Water Bodies)

நீரை சேமிக்க நாம் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை நம்முன்னோர்கள் நமக்கு வெட்டி வைத்த ஏரி, குளம், கண்மாய்களை பாதுகாத்தாலே போதும் என்பதை தண்ணீர் தட்டுப்பாடு உணர்த்தியுள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளனர். ஏரி, குளம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகாரமின்றி யாரும் நுழையக்கூடாது, ஏரிப் பகுதிகளில் மரங்களை நடக்கூடாது. ஏரிக்கரையில் மதகுகளை, வயல்வாய்க்கால்களை மற்றும் கட்டப்பட்டுள்ள கட்டமைப்புகளை சேதப்படுத்தக் கூடாது என்ற உத்தரவுகள் நடைமுறையில் உள்ளன. இதனை பின்பற்றி மழை நீரை முறையாக சேமிக்க வேண்டும். 

4. ஏரேட்டர்கள் (Aerators)

தினமும் நம் வீட்டின் தண்ணீர் தேவைக்கு குழாய்கள் மூலம்தான் நீரை பயன்படுத்துகிறோம். குழாயிலிருந்து வரும் மொத்த நீரில் 50 சதவிகிதம் வீணாகிறது. இதனை தடுக்க குழாய்களில் ஏரேட்டர்களை பயன்படுத்தலாம். இது குழாயிலிருந்து வரும் தண்ணீரைக் காற்றுடன் சேர்த்து நுண்துளைகளின் வழியே இது வெளியே அனுப்பும். இதன்மூலம் 30 சதவிகித அளவுக்கு தண்ணீர் வீணாவது குறையும். நிமிடத்துக்கு எட்டு லிட்டர் அளவில் தண்ணீர் வெளியேறும். குழாய்களில் ஏரேட்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெளியேறும் தண்ணீரை எட்டு லிட்டரில் இருந்து ஐந்து லிட்டராக குறைக்க முடியும். 250 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை இணையத்திலும், கடைகளிலும் பலவித மாடல்களில் ஏரேட்டர்கள் கிடைக்கின்றன. 

pixabay

5. நீர் மீட்டர் (Water Meter)

நீர் மீட்டர் என்பது செலவிடப்படும் நீரை அளவிடும் கருவியாகும். இது நீரின் அளவை பதிவு செய்ய பயன்படுகிறது. மீட்டர் அளவீடுகள் படிக்க எளிதாக இருக்கும்படி, எளிதாக அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்பட வேண்டும். அபார்ட்மெண்டுகளில் சமையலறையில் ஒன்று மற்றும் குளியலறையில் மற்றொன்று நிறுவப்பட்ட வேண்டும். இவ்வாறு நிறுவதால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் செலவழிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

தண்ணீரைப் பாதுகாக்க இந்திய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் (Steps Taken To Conserve Water)

நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு குறைந்து வருகின்றது. தண்ணீரைப் பாதுகாக்க இந்திய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

1. மகாராஷ்டிரா – வடிகால் கோடுகள் சரி செய்யப்பட்டுள்ளன ( In Punjab – Drainage Lines Are Being Fixed )

மகாராஷ்டிராவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய பகுதியில் சுமார் 5,000 கிராமங்களை ஒருங்கிணைத்து மழைநீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை கடந்த 2015-16ல் முதல் கட்டமாக அப்போதைய மாநில அரசு அமல்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் இப்பகுதியை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதியாக மாற்றுவதே இதன் பிரதான நோக்கம். இதன் பின்னர் புனே பிராந்தியத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மழைநீர் சரியாக நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்பட்டது. வடிகால் சீரமைத்து நீரை சேமித்து வருகின்றனர். இதனை மக்கள் தொடர்ந்து செய்து வந்ததால் தற்போது பெரும்பாலான மாவட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.

2. தெலுங்கானாவில் – தொட்டிகளை கட்டி கிராம மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது (In Telengana – Construction Of Tanks Is Changing The Lives Of The Villagers)

தெலுங்கானாவின் மெடிகட்டாவில் அம்மாநில அரசு  80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காலேஸ்வரம் அணை கட்டியுள்ளது.  மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உருவாகும் கோதாவரி நதியானது தெலுங்கானா மாநிலம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. எனவே கடலில் கலக்கும் நீரினை விவசாகிகள் பயன்படுத்தும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 16.37 டிஎம்சி  ஆகும். இந்த அணை ஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் திட்டமாகும். மேலும் இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரை பயன்படுத்தி அம்மாநில மக்கள் தொட்டிகள் உருவாக்கி நீரை சேமித்து வருகின்றனர். 

youtube

3. ராஜஸ்தானில்- மக்கள் பண்ணைகளில் சிறிய குளங்களை உருவாக்கியுள்ளனர் (In Rajasthan- People Have Created Small Ponds In The Farms)

தண்ணீர் பாதுகாப்பு குறித்த ராஜஸ்தானில் மக்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தார் பாலைவன பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமமொன்றில் தனது தண்ணீர் மேலாண்மை செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மக்கள் பண்ணைகளில் சிறிய குளங்களை உருவாக்கி மழை நீரை சேகரித்துள்ளனர். ராஜேந்திர சிங் என்பவர் மழை நீர் சேகரிப்பு, நீர் வழித்தடங்களில் சிறு சிறு தடுப்பணைகள் கட்டி ராஜஸ்தானில் பல கிராமங்களை நீர் வளமிக்க பகுதியாக மாற்றியுள்ளார். இதே போல அம்லாரூயாவும் அவரின் ஆகார் தொண்டு நிறுவனம் சார்பில் தடுப்பணைகள் அமைத்து நீரை சேமித்து வருகிறார். 

youtube

4. தமிழ்நாட்டில் – நாகா நதியை புதுப்பிக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைத்துள்ளனர் (In Tamil Nadu – 20 Thousand Women Came Together To Revive Naga River)

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் 24 மாவட்டங்களில் ஒன்று  வேலூர். இதனால் இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நாகநதி சீரமைப்பு திட்டம். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதிதான் திருவண்ணாமலை மற்றும் வேலூரின் ஜீவாதாரணமாக திகழ்ந்தது. ஆனால் இந்த நதி கடந்த 15 ஆண்டுகளாக மெல்ல மெல்ல செத்துவந்தது. இதனை 20 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து காப்பாற்றி உள்ளார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்கும் 3500 மீழ் கிணறுகளை கட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தை மற்ற நாட்டின் பகுதிகளிலும் செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சம் நிச்சயம் ஏற்படாது என்பதே உண்மை.

கேள்வி பதில்கள் ( FAQ’s)

பள்ளியில் தண்ணீரை எப்படி சேமிக்க முடியும்? (How can we save water at school?)

அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும். மேலும் மழை நீரை சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் கை கழுவும் போது வேகமாக கழுவுமாறு அறிவுறுத்த வேண்டும். 

நமது அன்றாட வாழ்வில் தண்ணீர் ஏன் விலைமதிப்பற்றது? (How water is precious in our life)

நமது அன்றாட வாழ்வில் தண்ணீர் அத்தியாவசியமாக உள்ளது. குடிக்க, குளிக்க, சமைக்க என தண்ணீரின் பங்கு அளப்பரியது. ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது என்பது உண்மை. எனவே தண்ணீரை சேமித்து நமது தலைமுறையினரின் வாழ்வை மகிழ்விப்பது நமது கடமை. 

இந்தியாவில் நீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள் யாவை? (What are the main reasons for water scarcity in India? )

இந்தியாவில் நீர் பற்றாக்குறை இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களால் ஏற்படுகிறது. நீர் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகள் வளங்களை சரியாக நிர்வகிக்காதது, அரசாங்கத்தின் கவனமின்மை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகள் ஆகியவை அடங்கும். நீர் வளங்களை அளித்து நகரமயமாதல் ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle