Lifestyle

கிறிஸ்துமஸ் என்றால் என்ன? அறிந்ததும் அறியாததுமான சுவாரசியங்கள்

Mohana Priya  |  Dec 24, 2018
கிறிஸ்துமஸ் என்றால் என்ன? அறிந்ததும் அறியாததுமான சுவாரசியங்கள்

கிறிஸ்துமஸ் என்றால் என்ன?(Christmas)
” கிறிஸ்துமஸ் ” என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

விவிலியத்தில் மத்:1:21-22 ‘கன்னி கருத்துரித்து மகனை பெறுவார். அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்க மனுமகன் மனுவாக பிறப்பு எடுத்த நன்னாள். உங்களுக்கும் எனக்கும் மீட்பை கொடுத்த மீட்பரின் பிறந்த நாள். இதையே யோவான் 3:16 வசனத்தில் ‘தன் ஒரேமகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு தன் மகனையே அளிக்கும் கடவுள் உலகின் மேல் அன்பு கொண்ட நாள் – அது தான் கிறிஸ்மஸ்.

கிறிஸ்துமஸ் உருவான கதை(Christmas)
இயேசுயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடைகாண முற்பட்டுள்ளனர்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகளும் கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள். குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்!

இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும்! குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால இது மிகையல்ல! இந்த நாட்கள்தான் கிறிஸ்துமஸ் முகிழ்க்கக் காரணமானது!

பைபிளில் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், “பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார்,” என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், ” நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது…” என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தேவாலயங்கள் ஒன்றுகூடி யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிடமுடிவு செய்து அறிவித்தன!

முதன் முதலில் கிறிஸ்துமஸ் சனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது! இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார். இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்தவர்களில் அப்போதைய பெரும்பிரிவினரான பாகான் இனத்தவர்கள் கொண்டாடிய “சேட்டர்நேலியா” திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.

12 நாள் கிறிஸ்மஸ்(Christmas)
டிசம்பர் மாதம் 25ம்தேதியிலிருந்து சனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நட்களும் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் பல ஊரகப்பகுதிகளில் கடைப்பிடித்திருக்கின்றனர். ” The Twelve Days of Christmas ” என்ற புகழ் பெற்ற பாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்த நாட்களில் ஆடல் பாடல் என்று தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் உருவானதுதான் ” CAROL ” எனப்படும் குழு நடனப் பாடல்! வட்டமாகச் சுற்றி நின்றுகொண்டு நடனமாடிக்கொண்டே பாட்டிசைத்து கிறிஸ்து பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இதற்கென்றே பாடற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்களில் பாடுவதையும், சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலாப் போவதும், தங்கள் வீட்டருகே வரும்போது அவர்களுக்கு குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். இன்றும் பல நாடுகளில் சில இடங்களில் இத்தகைய குழுப்பாடல் பாடி வலம் வருவதைக் காணலாம்.

பரிசுப்பொருட்கள்(Gifts)
கிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால்? ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக்கொள்கின்றார்கள் மக்கள்? புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, “உலகை உய்விக்கப்பிறந்துள்ள அன்னை மேரியின் தவப்புதல்வராம் குழந்தை யேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள்அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்…” என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.

இருந்தாலும் 1800கள் வரையில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கொண்டதாக பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் “சாண்ட்ட கிளாஸ்” என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை(Christmas Tree)
சீர்திருத்த கிறிஸ்துவ மதம் உருவாகக் காரணமாக இருந்த மார்ட்டின் லூதர் கிங்கும் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்தான். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார். இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களின் வர்த்தகச் சந்தை இன்று அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 50 ஆயிரம் மில்லியன் டாலர்கள் மதிப்பு என்றால் நம்ப முடிகிறதா?

மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
கடல் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மழையைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
இவையாவும் அழகான சந்திப்புகள்தான். ஆனால் இவற்றைவிட ஓர் அற்புதமான சந்திப்பு ஒன்று நம் நடுவே நிகழப்போகிறது. விண்ணகம் மண்ணகத்தை சந்திக்கப்போகிறது. பாசம் பகையைச் சந்திக்கப்போகிறது. ஆம்! கடவுள் மனிதனை சந்திக்கப் போகிறார். கிறிஸ்து பிறப்பிற்காக நம்மையே தயாரிக்கும் காலம் முடிந்து, காத்திருக்கும் கண்களுக்கு விருந்து படைக்க, இதோ மீட்பர் இயேசு பிறந்துவிட்டார்… வாருங்கள்.

மனித வாழ்விலே சந்திப்புகள் பலவிதம். சில சந்திப்புகள் சந்தோசத்தை கொடுக்கின்றன. சில சந்திப்புகள் சங்கடங்களை கொடுக்கின்றன. கண்களால் காண இயலாத கடவுள் கண்களால் காணும் வகையில் மனிதனாக, இயேசு பாலனாக மண்ணில் பிறந்த வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் விழா.

உலகின் அனைத்து நகரமே கிறிஸ்துமஸை கொண்டாட தயாரிகிவிட்டது. நீங்களும் இந்த திருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்.
POPxo நேயர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

 

Read More From Lifestyle