DIY Life Hacks

உறவற்ற 11 வருடத் தனிமை.. உடன் இருந்த மனைவியும் இறந்து போக.. மௌனமான ஐஐடி பேராசிரியர்..

Deepa Lakshmi  |  Aug 29, 2019
உறவற்ற 11 வருடத் தனிமை.. உடன் இருந்த மனைவியும் இறந்து போக.. மௌனமான ஐஐடி பேராசிரியர்..

சென்னையின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐஐடி யில் (iit) பணிபுரிந்த பேராசிரியரின் 11 வருடத் தனிமை கதை தற்போது சென்னையை பரபரப்பாக்கி இருக்கிறது.

சென்னை கொட்டிவாக்கம் சாமிநாதன் 4வது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (75) சென்னை ஐ ஐ டியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கல்யாணி (68) . இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு ஒரே மகள் அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். சந்தோஷமாக வாழ்ந்த மகள் திடீரென இறந்ததால் மகளின் இறப்பு அவர்கள் இருவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த சமயம் நடைபெற்ற கசப்பான சில சம்பவங்களால் பேராசிரியர் ராஜகோபாலன் தனது மனைவியுடன் தனிமைப்படுத்தப்பட்டார்.

 

Twitter

கல்யாணியும் ராஜகோபாலனும் அக்கம்பக்கத்தினருடன் கூட பேச முயற்சிக்கவில்லை. மனைவிதான் ராஜகோபாலனுடைய உலகமாக இருந்திருக்கிறது. அவரும் கடந்த வருடம் முதுமையால் படுத்தப்படுக்கை ஆகிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பலம் ராஜகோபாலனுக்கு இல்லை.

தன்னால் முடிந்தவரை ராஜகோபாலனே மனைவியைக் கவனித்திருக்கிறார். மனைவியைக் குழந்தை போலவே பராமரித்தும் இருக்கிறார். வீட்டில் இருந்து வெளியே சென்று உணவு வாங்கிவந்து மீண்டும் மனைவிக்கு ஊட்டி விட்டு சாப்பிட்டும் சாப்பிடாமலும் நாள்களைக் கழித்த ராஜகோபாலானுக்கு பிடித்த விஷயம் நாற்காலியில் அமர்ந்து மனைவி முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

மனைவி கல்யாணி உயிரோடு இருக்கிறாரா என்பதை தெரிந்து அவரது கால்களை பிடித்து அழுத்துவாராம். அப்போது கல்யாணியின் உடல் அசையுமாம். தான் வாங்கி வந்த ஜூஸை மனைவிக்கு வாயில் ஊட்டுவாராம். கடந்த 28ம் தேதி அன்று கல்யாணியின் உடலில் எந்த அசைவும் இல்லை. ஆகவே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்டிருக்கிறார்.

 

twitter

அவருக்கு உதவ அவர்கள் வீட்டிற்குள் 11 வருடங்கள் கழித்து அப்போதுதான் நுழைகின்றனர் .. அந்த வீடு முழுதும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. எலும்பும் தோலுமாக கல்யாணி படுத்தப்படுக்கையாக இருக்க அவரது கைகளில் புண்கள் வந்து அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தனவாம்.

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசாரும் ஆம்புலன்ஸ்சும் ராஜகோபால் வீட்டிற்கு வந்தும் அவர்களுடன் ராஜகோபாலன் ஒத்துழைக்காததால் திரும்பி விட்டார்களாம். ஆம்புலன்ஸ் ட்ரைவர் தந்த தகவலின் பேரில் உறவுகள் அறக்கட்டளைக்கு விஷயம் தெரிந்து அவர்கள் ராஜகோபாலனிடம் பேசி கல்யாணியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் கல்யாணி இறந்து விட்டதாக கூறப்பட்டது. பிணவறைக்கு முன்னர் அழுதுகொண்டே காத்திருந்த ராஜகோபாலன் மனைவியின் சடலம் வந்ததும் அவர் முகத்தையே பார்த்தபடி மெளனமாக இருந்தாராம். கல்யாணியின் உடல் தகனம் செய்ய உறவுகள் அறக்கட்டளை உதவி இருக்கிறது.

 

twitter

தகன நேரத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ எனும் பாடலை ராஜகோபாலன் பாடியிருக்கிறார். அதைக் கேட்ட அனைவரும் அங்கு அழுதுள்ளனர். ராஜகோபாலன் உறவினர்கள் எப்போதாவது எங்களுக்கு ஈமெயில் அனுப்புவார். அவர் மகள் இறந்த தகவல் கூட எங்கள் உறவுகளில் நிறையபேருக்கு தெரியாது என்று கூறியிருக்கின்றனர்.

ராஜகோபாலன் பற்றி அக்கம்பக்கத்தினர் சொல்லும்போதும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் இங்கே குடி வந்தனர். யாரோடும் பேசியது இல்லை. நாங்கள் சிரித்தால் கூட பதிலுக்கு சிரிக்காமல் செல்வார்கள். அவர்களைத் தேடி நண்பர்கள் உறவினர்கள் என யாரும் வருவதில்லை. ஒரு வருடமாக ராஜகோபாலன் மட்டுமே வெளியில் வருவார். அவர்கள் வீடு எப்போதும் இருளில் இருக்கும். ஒரு விளக்கு தான் எரியும். ஜன்னல் கதவுகளை பூட்டியே வைத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர்.

கல்யாணியின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் ராஜகோபாலனின் உறவுகள் அவரை அவர்கள் வீட்டிற்கு அழைத்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு மனைவியோடு வாழ்ந்த வீட்டிற்குள் வந்து கதவை சார்த்திக் கொண்டு அதே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஆனால் அங்கே பார்ப்பதற்கு கல்யாணியின் முகம் நிஜத்தில் இல்லை. அவரது நினைவுகளில் மட்டுமே இருக்கும்.

லட்சக்கணக்கில் பணம் இருப்பதால் ஒருவர் உறவும் இல்லாமல் தனியாக வாழ்வதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஐஐடி பேராசிரியர் ராஜகோபாலனின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடமாக இருக்கிறது. எந்த துயரமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள ஒரு சிலரை சேர்த்துக் கொள்வது இதற்கு சரியான முடிவாக இருக்க முடியும்.

நேற்று முன்தினம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தை முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே மேற்கண்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From DIY Life Hacks