கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கும் ஒரு மரணமாக ஐஐடி (iit)மாணவி பாத்திமாவின் மரணம் பார்க்கப்படுகிறது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் படித்து வந்தார்.
கடந்த நவம்பர் 8 அன்று மாணவி தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்த போலீசார் இது மன அழுத்தம் காரணமாக செய்யப்பட்ட தற்கொலை என விசாரணையை முடித்துள்ளனர்.
இந்தியாவின் ஐஐடி (iit) மாணவர்களில் சிறந்த மாணவி என பெயர் பெற்றவர் மாணவி பாத்திமா. எல்லா பாடங்களிலும் முதலிடத்தில் இருக்கும் அவர் ஒரு பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தார். அதற்கு அந்த துறை பேராசிரியரின் மத ரீதியான பாகுபாடு தான் காரணம் என்று பாத்திமா லத்தீப் தரப்பில் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து மதரீதியிலான பாகுபாட்டால் துயரங்களையும் அவமானங்களையும் அனுபவித்த பாத்திமா லத்தீப் மரணமே இதற்கு முடிவு என்று தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு அழுத்தங்கள் தரப்பட்டிருக்கிறது என்கின்றனர் மாணவியின் பெற்றோர்.
மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை இன்னும் ஆய்வு செய்யவில்லை என தெரிய வருகிறது. பாத்திமாவின் இறுதி சடங்குகள் முடிந்து மாணவியின் சகோதரி அந்த போனை ஆன் செய்த போதே தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இவர்கள் இருவர்தான் காரணம் என குறிப்பிட்டிருக்கிறார். கூடவே சாம்சங் நோட்டை பாருங்கள் எனவும் ஹிண்ட் கொடுத்திருக்கிறார் பாத்திமா.
அதை தொடர்ந்து சாம்சங் நோட்டை திறந்து பார்த்த போது தன்னை மனரீதியாக துன்புறுத்திய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர மேலும் இரண்டு பேராசிரியர்கள் மிலிந் பிராமி, ஹேமச்சந்திரன் காரா பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் தந்தை தனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல. தேசமெங்கும் இந்துத்வா பரவுவதால் ஒரு இஸ்லாமியராக எங்கள் மகளை வெளியே அனுப்பவே பயந்தோம். தன்னுடன் தொலைபேசியில் பேசும்போது ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும் தான் மோசமாக நடத்தப்படுவதாகவே பாத்திமா தன்னிடம் அழுத்ததாக கூறியிருக்கிறார்.
பாத்திமா படித்த துரையின் பேராசிரியர் உமாகாந்த் தாஸ் கூறுகையில் பாத்திமா தற்கொலை செய்து கொண்டார் என்கிற அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. எப்போதும் துடிப்பாக இருக்கும் பெண் அவர். அவருக்கு ஏதாவது பிரச்னை என்றால் எங்களிடம் தெரிவித்திருக்கலாம். நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம் என வருந்தி இருக்கிறார்.
இந்நிலையில் மாணவியின் தாயார் ஊடகங்களுக்கு உருக்கமான ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். இஸ்லாம் மக்களுக்கு இப்போது பாதுகாப்பில்லை என்று எங்களுக்கு பயம் இருந்தது. முதலில் அவளுக்கு வடமாநிலத்தில் இடம் கிடைத்தது. அங்கே நடக்கும் கொடுமைகளை கண்டு பயந்து சென்னை பாதுகாப்பான இடம் என்று இங்கே அனுப்பினோம்.
என் மகள் நான் விமானத்தில் போகிறேன் பத்திரமாக இருப்பேன் என்று கூறினாள். அப்போதும் சொன்னேன் மகளே விமானத்தில் சென்றாலும் நாம் சாலைகளில் நடக்க வேண்டி வரும் சாலைகளில் சர்வ சாதாரணமாக படுகொலைகள் நடக்கும் நாடு இது என்று அவளை எச்சரிக்கை செய்தேன்.
அப்படி இருந்தும் சென்னை ஐஐடியில் அவள் விருப்பப்படி சேர்ந்தாள். எல்லாவற்றிலும் முதல் மாணவியாக இருந்தாள். ஆனாலும் தொடர்ந்து மதரீதியாக அவள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறாள். காரணம் அவள் பெயர் பாத்திமா லத்தீப் ஆயிற்றே. அடுத்த செமஸ்டருக்கான புத்தகங்களை இப்போதே வாங்கி விட்டதாக கூறியவளுக்கு சாக வேண்டிய அவசியம் என்ன?
என் மகளுக்கு சுடிதார் கயிறை கூட இறுக கட்டத் தெரியாது. காரணம் அது அவளுக்கு இறுக்கி வலி ஏற்படுத்தும் என்பாள். அதனாலேயே அவளுக்கு லெகிங்ஸ்சும் ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்கு கயிறு நெறிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என தெரியவில்லையே எனக் கதறினார் மாணவி பாத்திமாவின் தாய்.
உச்சநீதிமன்றம் உயர்நீதி மன்றம் என எங்கள் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை நான் விடப்போவதில்லை. இன்னொரு பாத்திமாவை இழக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர் தன்னுடைய பேட்டியை முடித்துக் கொண்டார்.
நமக்கு வெகு அருகே இருக்கும் பல மனிதர்களின் மனதில் எத்தனையோ குரூரங்கள் அடங்கி இருக்கின்றன. நாம்தான் அவற்றை காணத் தவறி விடுகிறோம். அதனால் பல உயிர்கள் மனவேதனையோடு பறி போகின்றதை செய்வதறியாது பார்த்து நிற்கிறோம். பிரபஞ்சத்திற்கு எல்லாம் தெரியும். நம் மனதை நோகடிப்பவர்களுக்கான சரியான தண்டனையை அது தந்தே தீரும்.
எப்படி எப்போதும் புன்னகைத்த முகத்தோடு இருப்பது? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான குறிப்புகள் !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்