தமிழ் சினிமாவில் தூள் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார்.
பரவை முனியம்மா காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன், ஜெய்சூர்யா, ராஜாதி ராஜா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 2003ம் ஆண்டு வெளியான தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா (paravai muniyamma) .
அந்த படத்தில் வரும் ‘சிங்கம் போலெ’ பாடல் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கியது. சுமார் 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார். மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
அதுமட்டுமின்றி பரவை முனியம்மா (paravai muniyamma) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து வந்தார். தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் இறுதியாக 2014ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் உடல்நிலை அடிக்கடி மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதையடுத்து பரவை முனியம்மா தனது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 லட்சம் ரூபாய் இருப்பு நிதியும் அதன் மூலம் குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் கிடைக்குமாறு உதவினார்.
மேலும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கவும் ஆணையிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. தொடர்ந்து அவரது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பட்டதாரி படத்தில் நடித்திருந்த நடிகர் அபி சரவணன் அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்துள்ளார்.
மேலும் அவருக்கு பணஉதவியும் செய்து, மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அபி, பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் அவதிப்படுவது குறித்து நான் கேட்டறிந்தேன். அதனால் தீபாவளியையே நான்தான் கொண்டாடவேண்டும் என விரும்பினேன்.
ஆனால் சுஜித் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு நேற்று தான் பரவை முனியம்மாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து போய் பார்த்தேன். தீபாவளிக்கு உடை, பழம், ஹார்லிக்ஸ் என அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சென்றேன்.
என்னை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். 80 படங்களுக்கு மேல்நடித்துவிட்டேன். இதுவரை என்னை யாருமே வந்து பார்க்கவில்லை என பரவை முனியம்மா மனமுருகி கூறினார். சிவகார்த்திகேயன் மட்டும் வந்து 30 ஆயிரம் ருபாய் கொடுத்துவிட்டு சென்றார். அவருக்கு அடுத்து நீ தான் வந்திருக்க என மகிழ்ச்சி பொங்க கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கையில் 8 ஆயிரம் ருபாய் பணம் கொடுத்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என கூறிவிட்டு வந்தேன் என அபி சரவணன் கூறினார். முன்னதாக நான் இறந்த பிறகு தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு வழங்க வேண்டும் என பரவை முனியம்மா (paravai muniyamma) அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தனது அசாத்திய பாடல் திறமைகளால் கலைமாமணி விருது பெற்ற பரவை முனியம்மாள் தற்பொழுது சிகிச்சை பெற முடியாமல் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவருக்கான மருத்துவ சிகிச்சைக்காக உதவியை தமிழக அரசு செய்து உதவ வேண்டும் என கண்ணீர் மல்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!